Monday, January 10, 2022

தாய் தந்தையர் வணக்கம் வேதநாயகம்பிள்ளை பெண்மதி மாலை

 தாய் தந்தையர் வணக்கம்

வேதநாயகம் பிள்ளை (1826 – 1889)

தமிழகக் கிறித்துவத் தொண்டர்களில் தலைமையானவர். திருச்சிராப்பள்ளி – குளத்தூரில் பிறந்தவர். முன்சீப் பதவி வகித்தவர். இவரது பிரதாப முதலியார் சரித்திரம் இவருக்குப் பெரும்புகழைப் பெற்று தந்தது. தமிழில் தோன்றிய முதல் நாவல் இதுவேயாகும். புதியவகையான இலக்கியப் படைப்பாளர்களுக்கு இவரது இந்நூல் வழிகாட்டியாக அமைகிறது. கிறித்துவரே ஆனாலும் சமரச சன்மார்க்கத்தினர். இவர் மொத்தம் 16 நூல்களை இயற்றியுள்ளார்.

இவர் இயற்றிய நூல்கள்:

1. பிரதாப முதலியார் சரித்திரம்

2. சர்வ சமய சமரசக் கீர்த்தனை

3. நீதிநூல்

4. பெண்மதி மாலை

5. சுகுண சுந்தரி சரித்திரம்

6. தேவமாதா அந்தாதி

7. திருவருள் அந்தாதி

8. திருவருள் மாலை

9. பெரிய நாயகி அம்மாள் பதிகம்

10. சத்திய வேதக் கீர்த்தனை





தாய்தந்தையர் வணக்கம் என்ற இப்பகுதி


பாடல்

1. மாதா பிதாவை வணங்கு  - நாளும்

ஆதாரமாய் அவர்சொல்லுக் கிணங்கு

2. தந்தை தாய் சாபம் பொல்லாது – அவர்

சிந்தை நொந்தால் மக்கள் செல்வம் கில்லாது

3. மாதா பிதாவுக்குத் துரோகம் – செய்யும்

பாதகரைச் சுற்றும் பாவமேநேகம்

4. பெற்றவர் நேசத்தைத் தேடு – அவர்

குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டாடு

5. தாய்தந்தைக் குதவாத பிள்ளை – தன

தாயுசும் வாழ்வு மடியோடே கொள்ளை

6. கட்டியுனை வளர்க்க நாமே – முன்பு

பட்டபாடுகள் சொல்லப் பாரதமாமே

7. உள்ளதாய் தந்தைக்குத் தீங்கு – செய்யும்

பிள்ளையைத் தன்பிள்ளையே பழிவாங்கும்

8. கடலைப் போல்மாதா சகாயம் – அதற்கு

உடல்செருப்பாத் தைத்துப் போடுதல் ஞாயம்

9. மதியிது மதியிது பெண்ணே – புண்ணிய

வதியல்லவோ நல்ல மகராசி கண்ணே.


நான்காம் திருமொழி நம்மாழ்வார் பாடல்கள்

 நான்காம் திருமொழி


நம்மாழ்வார்

ஆழ்வார்களில் தலைமை சான்றவர். இவரை உடலாகவும் ஏனையோரை உறுப்புகளாகவும் வைணவர்கள் கருதுகின்றனர். பாண்டி நாட்டில் ஆழ்வார் திருநகரி வேளாண் மரபில் காரியார்க்கும் உடைய நங்கைக்கும் பிரமாதி வருடம் வைகாசித் திங்கள் பௌர்ணமி திதியில் இறைவனின் அம்சமாகப் பிறந்தவர். சடகோபர், மாறன், பராங்குசர் ஆகியவை இவருக்கு வழங்கும் வேறுபெயர்கள். சைவத்திற்கு மாணிக்கவாசகர் எப்படியோ, அப்படியே வைணவத்திற்கு நம்மாழ்வார். காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியாகும்.


இயற்றிய நூல்கள்:

நம்மாழ்வார் நான்கு நூல்களை இயற்றியுள்ளார். அவை திருவாசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி. இந்நான்கையும் வைணவர் தம் சமயத்திற்குரிய சதுர்மறைகளாகக் கூறுவர். நம்மாழ்வார் பாடல்கள் திருவாய்மொழி எனப்படும். ஏனையோர் பாடியன திருமொழி என்று அழைக்கப்படும். திருவாய்மொழி திராவிட வேதம் எனச் சிறப்பிக்கப்படுகிறது. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் இறைவனைப் பாடாமல் நம்மாழ்வாரையே இறைவனாகக் கருதி பாடல்களை எழுதியுள்ளார்.


1. அஞ்சிறைய மடநாராய், அளியத்தாய் நீயும்நின்

அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி

வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்

வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ?


2. என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்

என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே?

முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்

முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?


3. விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்

மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு

மதியிலேன் வல்வி னையே மாளாதோ வென்று, ஒருத்தி

மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே


4. என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத

என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ

நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்

நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ?


5. நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே

நல்கத்தா னாகாதோ? நாரணனைக் கண்டக்கால்

மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.

மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே.


1. அழகிய சிறகுகளைக் கொண்டிருக்கின்ற மடப்பம் மிக்க நாராய்! நீ கருணை உள்ளம் அதிகமாகவே கொண்டிருக்கின்றாய்! நீயும் உன்னுடைய, அழகிய சிறகுகளை உடைய உன் சேவலுடன், “ஆ! ஆ! !” என்று அடியேனின் உள்ளம் உவக்குமாறு இரக்கம் கொண்டு எனக்கருள்புரிகின்றாய்! கருடாழ்வானைத் தன் கொடியாகக் கொண்டிருக்கின்ற எம்பெருமான் ஸ்ரீமத்நாராயணனிடத்தே என் பொருட்டுத் தூது செல்வாயாக! அவ்வாறு தூது சென்றிருக்கின்ற போது அந்த எம்பெருமான் உங்கள் முகத்தைக் கவனித்துப் பார்க்காமல் உங்களைச் சிறையில் அடைத்துவிட்டால் அடியேனுக்காகச் சிறைப்பட்டிருப்பதற்குச் சரி என்று சம்மதிப்பீர்களா! நீங்கள் அவ்வாறு சம்மதிப்பீர்களாயின் அஃது ஒரு குற்றமும் ஆகாது. நன்மையே பயக்கும்.

2. ஒன்று சேர்ந்து இணைந்து வாழ்கின்ற குயில்களே!அடியேனுக்காக எம்பெருமான் செந்தாமரைக் கண்ணனிடம் தூது செல்வீர்களா! அடியேனின் சொற்களை எம்பெருமான் ஸ்ரீமத் நாராயணனிடத்தே நீங்கள் சென்று எடுத்துரைப்பதனால் எவ்வகையிலும் குற்றமுண்டாகாது. அந்த எம்பெருமானின் திருவடிகளினிடத்து அடியேன் இருந்து கொண்டு குற்றேவல்களைச் செய்வதற்கு இயலாதவாறு அடியேன் முன்பு செய்துள்ள தீவினைகளெல்லாம் தடுத்து விடுகின்றன. அடியேன் அந்த எம்பெருமானுக்கு உதவி செய்வதற்கு ஏற்கனவே முயலாமலிருந்துவிட்டேன். அத்தகைய அடியேன் இதற்கு மேலும் அகன்று போகலாகுமோ! அவ்வாறு செய்வது முறையாகுமோ! ஆகாது.


3. நல்வினை காரணமாகப் பெண் அன்னத்துடன் கலந்து மகிழ்ச்சியுடன் இருக்கின்ற அழகிய நடையையுடைய அன்னங்களே! “வாமனன்” என்னும் திருஅவதாரமான “குள்ள வடிவு” மேற்கொண்டு பிரம்மரியனாகிச் சென்று “மகாபலிச்சக்கரவர்த்தி” என்னும் மன்னனிடத்தே தன் அறிவின் மேன்மை காரணமாக இந்த உலகத்தை யாசித்துப் பெற்ற, கள்ள வாமனானப் பெருமானிடம் ஒரு பெண், தன்னுடைய வலிமை மிக்க வினைகளெல்லாம் அழிந்து போகாதோ! என்று எண்ணித் தன் உள்ளம் கலங்கி மயங்கிக் கிடக்கின்றாள்” என்று எடுத்துரைப்பீர்களாக!


4. நல்ல நீல நிறத்தினைக் கொண்டுள்ள “மகன்றில்” என்னும் பறவைகளே! என்னுடைய இத்தகைய இரங்கத்தக்க நிலைமையிலுள்ள என் நிலைமையைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தும், இவ்வாறு பிரிந்திருத்தல் என்பது தக்கதன்று என்று அந்த எம்பெருமான்  ஸ்ரீமந்நாராயணன் சிறிதளவும் எண்ணிப் பார்க்க வில்லையே! நீ மேகவண்ணனாகிய என் நாயகனிடத்தே சொல்வாயாக! என்று எதைச் சொல்லப் போகிறேன்! அந்த எம்பெருமான் உடனே வரவில்லை என்றால், என்னுடைய நல்ல உயிரானது இனியும் அத்தகைய தலைவரின் பொருட்டு, அவளிடத்திலே தங்கியிருக்காது என்னும் இத்தகவலை அவரிடத்தே சென்று ஒரு வார்த்தையை எடுத்துரைப்பதையேனும் செய்வீர்களா! செய்யாமல்விட்டு விடுவீர்களா! 


5. நீர் நிறைந்திருக்கின்ற வளம்மிக்க தோட்டங்களில் உள்ள மீன்களை உண்டு வாழ்கின்ற சிறியதான “குருகு” என்னும் பறவையே! அழகுமிக்க ஏழு உலகங்களையும் காப்பாற்றுகின்ற எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனை நீங்கள் காண்பீர்களேயானால், வினைகள் மிகுந்திருக்கின்ற அடியேனுக்கு “அருள்புரிதல்” என்னும் நல்ல செயலைச் செய்தலாகாதோ!” என்று நீங்கள் கேளுங்கள்! அதற்கு அவர் கூறும் ஏதேனும் ஒரு வார்த்தையைக் கேட்டு வந்து நீர் ததும்பிக் கொண்டிருக்கின்ற கண்களை உடைய அடியேனுக்கு எடுத்துரைப்பீர்களாக!


இஸ்லாமிய இலக்கிய வரலாறு

 இஸ்லாமியர்களின் தமிழ்த்தொண்டு

முன்னுரை

இஸ்லாமிய நாடுகளோடு தமிழகத்திற்கு இரண்டாயிரம் வருட வணிகத்தொடர்பு உண்டெனினும், மாலிக்காபூரின் படையெடுப்பிற்குப் பிறகுதான் தமிழகத்தில் இஸ்லாமியம் பரவத் தொடங்கியது. பலர் இஸ்லாமிய மதத்திற்கு மாறத் தொடங்கினர். அவர்கள் மதக் கருத்துகளையும் மதம் தொடர்பான செய்திகளையும் தமிழில் கூற முனைந்தனர். இதற்கு தமிழ் இலக்கியத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இஸ்லாமியர் வருகையால் தமிழுக்குச் சில புதிய இலக்கிய வரவுகள் கிடைத்தன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை நொண்டி நாடகம், படைப்போர், முனஜாத்து, கிஸ்ஸா, மசலா, நாமா முதலியனவாகும். நொண்டி நாடகத்துள், திருக்கச்சூர் நொண்டி நாடகம் குறிப்பிடத்தக்கது. கதைத் தலைவன் திருட்டு, காமம் முதலிய கெட்ட வழிகளில் சென்று அதற்குத் தண்டனையாகத் தன் கால்களை இழந்து நொண்டியான பிறகு, தான் செய்த தவறுகளுக்கு வருந்தி மேல்நிலை அடைவதாகக் காட்டுவதே நொண்டி நாடகம் என்பதன் பொது அமைப்பாகும். இஸ்லாமியப் புலவர்கள் தமிழிற்குச் செய்த தொண்டு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உமறுப்புலவர் (கி.பி.1642 - 1703)

உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். இயற்பெயர் உமறு கத்தாப். உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார். வடநாட்டுப் புலவர் வாலை வாருதியை எட்டையபுரம் அவைக்களத்தில் தன் புலமையால் வென்றார்.

வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின்படி சீறாப்புராணத்தைப் பாடினார். நூல் முற்றிலும் நிறைவடையும் முன்னரே சீதக்காதி இறந்துவிட்டார். பின் அபும்காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது. உமறுப்புலவர் அபுல்காசீம் அவர்களை நூலின் பல இடங்களில் நினைவு கூர்ந்துப் போற்றுகிறார்.

இவரை ஆதரித்த மற்றொருவர் அபுல்காசிம் மரைக்காயர். இவர், முதுமொழி மாலை, சீதக்காதி திருமண வாழ்த்து ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

காசிம்புலவர்

இவர் காயல்பட்டினம் என்ற ஊரைச் சார்ந்தவர்இவர் காயல்பட்டினம் என்ற ஊரைச் சார்ந்தவர்; திருவடிக் கவிராயரிடம் தமிழ் கற்றவர். அருணகிரிநாதரின் திருப்புகழில் மிகவும் ஈடுபட்டவர். நபிகள் நாயகம் ‘பரும்’ என அடியெடுத்துக் கொடுக்க அவர் மீது திருப்புகழ் பாடியுள்ளார். அருணகிரிநாதர் பாடியனவோ என ஐயுறும்படி காசிம் புலவரின் திருப்புகழ் அமைந்துள்ளது. சவ்வாதுப் புலவர் இவரை மதுரகவி என்று பாராட்டியுள்ளார். காலம் கி.பி.17ஆம் நூற்றாண்டு.

சவ்வாதுப் புலவர்

இவர் இளையான்குடி பகுதியைச் சார்ந்தவர். இரகுநாத சேதுபதியின் அவைக்களப் புலவராக இருந்தவர். வசைபாடுவதில் காளமேகப் புலவரைப் போன்று இவர் சொல்லால் சபித்துவிடும் ஆற்றல் கொண்டவர் என்பர். நாகைக் கலம்பகம், மதீனத்தந்தாதி, முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் ஆகியன இவர் பாடிய நூல்கள் ஆகும். காலம் கி.பி.17ஆம் நூற்றாண்டு.

வண்ணக்களஞ்சியப் புலவர்

நாகூர் பகுதியைச் சார்ந்தவர். இயற்பெயர் அமீது இப்ராஹீம். வண்ணப்பாக்களைப் பாடியதால் வண்ணக் களஞ்சியப் புலவர் என அழைத்து மகிழ்ந்தனர். இவர் இராமநாதபுர மாவட்டம் மீசல் என்ற ஊரில் குடியமர்ந்து வாழ்ந்தார் என்பர். இவர் கலைமான் நபியின் கதையைக் கூறும் இசை நாயகம் என்ற காப்பியத்தை 2,240 பாக்களால் இயற்றியுள்ளார். தீன் விளக்கம் என்ற புராணமும் இவர் இயற்றியதே.



குணங்குடி மஸ்தான் சாகிபு (1788-1885)

குணங்குடியைச் சார்ந்தவர். சுல்தான் அப்துல் காதிரு என்ற இயற்பெயருடையவர். இளமை முதல் துறவு பூண்டு வாழ்ந்தவர். மதுரை, காரைக்கால், சென்னை முதலிய ஊர்களில் ஞானம்பெற்று வாழ்ந்தவர். தாயுமானவர் பாடல்களில் பெரிதும் ஈடுபட்டு அவரது பராபரக்கண்ணிப் பாடல்களைப் போலவே, இஸ்லாமியப் பாடல்கள் புனைந்துள்ளார். இவரது பாடல்களைப் பண்டாரங்கள் நாடெங்கும் பாடித் திரிந்தது உண்டு. திருத்தணிகை சரவணப் பெருமாளையர் இவர் மீது நான்மணிமாலை பாடியுள்ளது இவரது பெருமையை உணர்த்தும். ஐயாசாமி முதலியார் குணங்குடியார் பதிற்றுப்பத்தந்தாதி பாடியிருப்பதும் இவரது பெருமைக்குச் சான்று தரும்.

இவர் தாயுமானவர் பாடல்களில் பெரிதும் ஈடுபட்டு அப்பாடல்களைப் போலவே தம் பாடல்களைப் பாடினார். குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியனநிலை, சமாதிநிலை முதலியன இவர் பாடியன. பராபரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி முதலிய இவருடைய பாடல்களாகும்.

செய்குத் தம்பி பாவலர்

நாகர்கோவிலை அடுத்த இலங்கடை பகுதியைச் சார்ந்தவர். இவர் ஒரு சதாவதானி; ஒரே சமயத்தில் நூறு செய்திகளை உள்வாங்கி விடையளிக்கவல்ல நினைவாற்றலுடையவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த இணையற்ற தமிழ்ப்புலவர்.

யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலரும் கதிரை வேற்பிள்ளையும், வடலூர் வள்ளலாரின் திருவருட்பாவை மருட்பா எனக் கூறிப் போராடிய காலத்தில், அஃது அருட்பாவே என வாதிட்டு வள்ளலாரின் பெருமையை நிலைநாட்டியவர். திருநாகூர்த் திரிபந்தாதி, திருகோட்டாற்றுப் பதிற்றுப்பத்து, நாயகமான்மிய மஞ்சரி, நீதிவெண்பா, அழகப்பக் கோவை, ஷம்சுத்தாடீசம் கோவை என்பன இவர் இயற்றியன.


சையது முகையதீன் கவிராயர்

கோட்டாறு இவருடைய சொந்த ஊர். இவரும் திருப்புகழ் சந்தத்தில் பாடல்கள் புனைவதில் வல்லவர். முகைதீன் பிள்ளைத்தமிழ், மாணிக்கமாலை முதலியன இவர் இயற்றியுள்ள நூல்களாகும்.

முடிவுரை

இவர்களைத் தவிர பிச்சை இப்ராஹிம் புலிவரின் திருமதீனத்தந்தாதியும் தக்கலை பீர் முகம்மது சாகிபின் ஞானமணிமாலை, ஞானப் புகழ்ச்சி, ஞானக்குறம், ஞானரத்தினக் குறவஞ்சி, ஞானப்பாட்டு ஆகிய நூல்களும் குலாம் காதிறு நாவலரின் நாகூர்க்கலம்பகம், நாகூர்ப் புராணமும் குறிப்பிடத்தக்கன.



மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி

 திருப்பள்ளியெழுச்சி

முன்னுரை

பள்ளியெழுச்சி என்பது மகளிர் விடியற்காலையில் எழுந்து நீராடி இறைவனை வழிபடும் நிகழ்வாகும். சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகத்தில் இப்பகுதி இடம்பெற்றுள்ளது. 

ஆசிரியர் குறிப்பு

திருவாதவூரார் என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும் சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராகப் பணிபுரிந்தார். ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சிவனடி சேர்ந்தார்.

பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் இவருடைய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. திருவாசகம், திருக்கோவையார் இவர் பாடியவை. 

‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்று இவர் இயற்றிய திருவாசகத்தை அறிஞர் உலகம் போற்றுகிறது. திருவெம்பாவை பாடல்கள் 20, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் 10 சேர்த்து மொத்தம் 30 பாடல்கள் மார்கழி 30 நாட்கள் இறைவழிபாட்டின் போது பாடப்படுகின்றன.

திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி தமிழின் தொண்ணூற்றாறு பிரபந்தங்களின் வகைகளுள் ஒன்று. உயிரினங்களைப் போன்று இறைவனும் இரவில் உறங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி துயில் எழுப்புவதாக இப்பாடல்கள் அமையப் பெற்றுள்ளன. இப்பாடல்களில் அதிகாலைப் பொழுதில் சுற்றுப்புறத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.


பதிகம் எழுந்த வரலாறு

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலையில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இதனை அளிருச்செய்தார். மாணிக்கவாசகர் தாம் பெற்ற இறை அனுபவத்தைத்தான் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில் கூறியுள்ளார். இதற்குப் புறச் சான்றாக இருக்கும் கோயில்தான் திருப்பெருந்துறை. இப்போது இது ஆவுடையார் கோயில் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

திருப்பள்ளியெழுச்சி என்பது சுப்ரபாதம் என வடமொழியில் வழங்கும். வைகறையில் – அதிகாலைப் பொழுதில் இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம். இவ்வகை இலக்கியம் தமிழில் உருவாகக் காரணமாக இருந்தவர் மாணிக்கவாசகர்.

திருப்பள்ளியெழுச்சி

1. போற்றியென் வாழ்முத லாகிய பொருளே

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்

ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறைஉறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே


2. அருணன் இந்திரன் திசைஅணுகினன் இருள்போய்

அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழவெழ நயனக்

கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்

திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே

அலைகடலே பள்ளியெழுந் தருளாயே


3. கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

ஓவின தாரகை ஒளியொளி உதயத்து

ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

தேவநற்  செறிகழல் தாளிணை காட்டாய்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே

4. இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே


5. பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்

போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்

சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா

சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே


6. பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்

பந்தனை வந்தறுத் தார் அவர்பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்

வணங்குகின்றார் அணங் கின்மண வாளா

செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

இப்பிறப்பு அறுத்துஎமை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே


7. அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு

அரிதென எளிதென அமரரும் அறியார்

இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே

எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும்

மதுவளர் பொழில்திரு உத்திர கோச

மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா

எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்

எம்பெருமான் பள்ளி யெழுந்தருளாயே


8. முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்

பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்

பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே

செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்

திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்

ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே


9. விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்

மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே

வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்

கண்ணகத் தேநின்று களிதரு தேனே

கடலமு தேகரும் பேவிரும் படியார்

எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்

எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே


10. புவனியில் போய்ப்பிற வாமையில் நாள்நாம்

போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்

அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்

படவும்நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே!




பொருள்

1

உயிர்களுக்கு முதல்வன் நீ, எங்கள் வாழ்வுக்கும் முதல்வன் நீ. உன்னை மலர்களால் அர்ச்சித்து, உன் திருமுகத்தில் காண்கின்ற அந்த அழகிய புன் முறுவலைப் பார்த்து மகிழ்ந்து வணங்குகிறோம். சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் அவற்றுக்கு பொருத்தமான மலர்களைத் தூவி வழிபடும்போது, உன்னுடைய திருமுகத்தில் எமக்கு அருள் புரிய வேண்டுமென்று மலர்கின்ற அழகிய புன்முறுவலைக் கண்டு மகிழ்ந்து, உன்னடிகளைத் தொழுகின்றோம். எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!

2

திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானே, சூரியனின் தேரோட்டியான அருணன் இந்திர தேவனின் திசையாகிய கிழக்குப் பகுதிக்குச் சென்று விட்டான். ஆதவன் உதயமானதால் புற உலகில் உள்ள இருளானது மெல்ல மெல்ல நீங்கி ஒளி வெள்ளம் எங்கும் பரவுகிறது. அதுபோல இறைவனே, உயிர்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதற்காக ஞான ஒளியை வழங்கும் வண்ணம் உன்னுடைய மலர் போன்ற முகத்தில் உள்ள கருணைக் கண்கள் மெல்ல மெல்ல திறக்கின்றன.

சூரியன் உதிக்கும்போது மலரும் தாமரை மலர்களில் உள்ள தேனை உண்டு ரீங்காரம் செய்யும் வண்டுகளைப் போல, உன்னுடைய கண்களிலிருந்து வழியும் கருணைத் தேனை உண்டு அடியவர்கள், உன்னுடைய புகழை இன்பத்தோடு பாடி ரீங்காரம் செய்கின்றனர். ஆனந்தமாகிய அருட்செல்வத்தை வாரி வழங்கும் மலையே, கடல் போன்ற நிலைத்த இன்பமாகிய வீடுபேற்றினை உடையவனே பள்ளியில் இருந்து எழுந்தருள்வாயாக.


3

திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானே! காட்டில் வாழும் குயிலும், வீட்டில் வளரும் சேவலும் மற்றும் மற்ற சிறுபறவைகளும் சூரியனின் விடியலைத் தங்களின் குரலால் உணர்த்துகின்றன. கோவில்களில் சங்க நாதம் கேட்கிறது.

விடியற்பொழுதில் சூரிய ஒளியானது அதிகாலையில் உள்ள நட்சத்திரங்களின் ஒளியை தன்னுள் இணைத்துக் கொள்கிறது. அதுபோலத் தேவர்களுக்கு எல்லாம் தேவனாகிய மகாதேவனே, உன்னுடன் அடியவர்களாகிய எங்களை உன்னுடன் இணைத்துக் கொள்ளவதற்கு ஏதுவாக உன்னுடைய கழல்கள் அணிந்த திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக.

தேவர்கள் உள்ளிட்ட மற்றவர்களால் எளிதில் காணப்பதற்கு அரியவனே, உன்னுடைய அடியவர்களின் மீது கருணை கொண்டு எளிமையாகக் காட்சி அளிப்பவனே பள்ளியில் இருந்து எழுந்தருள்வாயாக. 

4

திருப்பெருந்துறையில் நிறைந்துள்ள சிவபெருமானே, உன் அருளினை வேண்டி அடியவர்களில் சிலர் இனிமையான இசையினைத் தரும் வீணையை மீட்டியும், யாழினை இசைத்துக் கொண்டிருக்கின்றனர். மற்றும் சிலரோ ரிக் முதலிய வேதங்களைப் பாடியும், தோத்திரம் எனப்படும் தமிழ்ப்பாக்களைப் பாடியும் கொண்டிருக்கின்றனர். வேறு சிலர் மலர்களால் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள மாலைகளை கைகளில் கொண்டும் உள்ளனர்.

சில அடியவர்கள் தலைவணங்கி தொழும், பலர் அன்பு மேலீட்டால் அழுதும், மெய்மறந்து துவண்டும் காணப்படுகின்றனர். வேறும் சிலர் தலையின் மீது கைகளைக் கூப்பி அஞ்சலி செய்கின்றனர். இவ்வாறு உன் அடியவர்கள் பலரும் பல்வேறு நிலைகளில் காணப்படுகின்றனர். பல்வேறு நிலைகளில் இருக்கும் அடியர்களுக்கும், சிறியேனாகிய எனக்கும் உன் அருளை வழங்குவதற்காக பள்ளியில் இருந்து எழுந்தருள வேண்டும்.

5

குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அரசனே, நீ நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் உள்ளிட்ட பஞ்சபூதங்களிலும் நிலைத்திருப்பதாக ஞானியர்கள் கூறுகின்றனர். நீ பிறப்பு, இறப்புக்களைக் கடந்து நிலையாவன் என்று இசைப்பாடல்களால் பாடுகின்றனர், ஆடகின்றனர். ஆனால் உன்னை நேரே கண்டு அறிந்தவர்களை நாங்கள் காதால் கேட்டு அறிந்திலோம்.

நீ உன்னுடைய அடியர்களுக்கு எளியவனாகவும், ஏனையோருக்கு அரியவனாகவும் நிற்கின்றாய். எங்கள் குற்றங்களை எல்லாம் நீக்க எங்கள் முன்னே வந்து திருக்காட்சி தந்து அருள்கின்ற எம்பெருமானே, பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.

6

பிறவி வேரை அறுத்து புவியில் மீண்டும் பிறவாமல் காத்தருள வேண்டுவதாக இப்பாடல் கூறுகிறது. உமையம்மையின் மணவாளனே, சிவந்த தாமரை மலர்கள் சூழ குளிர்ச்சியான வயல்கள் நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே!

பரபரப்பை அறவே விட்டு மனதின் உட்காட்சியில் உன்னை கண்டு உணரும் மெய்ஞானியர் பலரும், இந்த மண்ணுலகிற்கு வந்து பாசக்கட்டுகளை அறுத்தவர் பலரும், கண்களில் மையைப் பூசிய பெண்களும் உன்னைத் தலைவனாகக் கொண்டு வணங்குகின்றனர்.

எங்களுடைய இந்தப் பிறவியின் வேரை அறுத்து, மீண்டும் பிறவாமை நிலையை அருளுபவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.

7

தேன் சிந்தும் மலர்களை உடைய சோலைகள் சூழ்ந்த, திருஉத்திர கோச மங்கை என்னும் தலத்தில் எழுந்திருக்கும் இறைவனே, திருப்பெருந்துறையின் அரசனே!

சிவானந்த அனுபவம் பழத்தினைப் போன்று இனிப்பாகவும், அமுதம் போன்று தெவிட்டாததாகவும், அடியவர்களுக்கு எளிதாகவும், ஏனையோருக்கு அரிதாகவும் இருப்பதை, அறிவில் சிறந்த தேவர்களாலும் வரையறுத்து கூற இயலவில்லை.

இவ்வுலகத்தில் இப்பிறப்பிலே வந்து அமைந்ததாகிய உடலாகிய இது சிவபெருமானது திருமேனியாகத் திகழுமாறும், இவ்வுடம்பில் விளங்கும் உயிராகிய இவன் அவனாகிய சிவமாக விளங்குமாறும் அருளி நின்று எங்களை ஆட்கொண்டருள்வாயாக.

இறைவா, நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது? அந்த முறைமையைக் கேட்டு அவ்வாறே ஒழுகுவோம். எம் பெருமானே, பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக.

அடியவர்கள் தம்தம் உடலினை, இறைவன் கோயில் கொண்டு உறையும் ஆலயமாக அமைத்துக் கொண்டால், இறைவன் திண்ணமாக அவ்வுடலில் எழுந்தருளுவான் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

8

உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் முற்பட்டவனே, முதலும், நடுவும், முடிவும் ஆனவனே, படைப்பின் கடவுள் பிரம்மன், காத்தல் கடவுள் திருமால், அழித்தல் கடவுள் உருத்திரன் ஆகிய மூவரும் உன்னை அறிய முடிந்தவர் அல்லர். வேறு யார் அறிவர்?

இத்தகைய தன்மையை உடைய நீ, உன்னுடைய அடியவர்கள் எளியவர்களாயினும், அவர்களின் இல்லங்களாகிய உள்ளங்களில் வந்து, அணைகின்ற விரல்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளுகின்றாய்.

பரம்பொருளே, சிவந்த தழல் போன்ற உன் திருமேனிக் காட்சி தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த திருக்கோயிலையும் காட்டி, என்னுடைய குருமூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, வலிய வந்து என்னை அடியவனாக ஏற்றுக் கொண்டாய். திகட்டாத முக்தி இன்பத்தின் வடிவினனே, பள்ளி எழுந்தருள்வாயாக.

9

வானுலகில் உள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத மேலான மெய்ப்பொருளே! உன்னுடைய அடியவர்கள் எளியவர்களாயினும் அவர்களுக்காக இந்த மண்ணுலகுக்கு வந்து வாழச் செய்தவனே!

வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்தவனே. பரம்பரையாக உனக்கு தொண்டு செய்யும் அடியவர்களாகிய எங்களின் கண்களுக்கு, காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பைத் தருகின்ற தித்திக்கின்ற தேனே!

பாற்கடலில் தோன்றிய அமுதமே! நெஞ்சில் இனிக்கும் கரும்பே! அன்பு செய்யும் தொண்டர்களின் எண்ணத்துள் நிறைந்தவனே! உலகம் அனைத்துக்கும் உயிரானவனே! எம்பெருமானே, பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக!

10

இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக வீடுபேறு கொள்கின்றது. அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக் கழித்துக்கொண்டிருக்கிறோம் என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும், பிரம்மன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள், இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர்! அத்தகைய விருப்பம் தரும் அமுதமே ! பள்ளி எழுந்தருள்க! என்று பாடுகிறார் மாணிக்க வாசகர்.






திருக்குறள் காலமறிதல்,சுற்றந்தழால்

 


 

 

 மனிதன் பேண வேண்டிய ஆளுமைப் பண்புகளுள் முதன்மையானது காலமறிதல் ஆகும். செயலுக்கு முன் காலத்தை அறிந்து கொள்ளுதல் எவ்வளவு வலிமை, ஆற்றல், திறம் படைத்தவரானாலும் காலமறிந்து ஒரு காரியம் செய்யாவிட்டால் பயன்படாது. இது போர்த்தொழிலுக்கு மட்டுமன்றிப் பொதுவான வாழ்வுக்கும் கருதப்பட வேண்டியதாகும். 

ஆடிப்பட்டம் தேடிவிதை, 

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பன காலமறிதல் குறித்த பொன்மொழிகள். காலம் கருதாமல் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிக்கும் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு. காலம் அறிதல் என்பது செயலுக்கேற்ற காலத்தை உணர்தலைக் குறிப்பது. மாறிக்கொண்டேவரும் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப செயல் மேற்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லும் அதிகாரம்.



   

  செய்வதற்குரிய காலம் அறிந்து செய்து முடித்தற்கான கருவிகளுடன் செய்பவர்க்கு செய்தற்கரிய செயல்களில்லை என இவ்வதிகாரம் கூறுகிறது.

காலப்பொழுதினால் பெறும் வெற்றி,காலமறிதலால் வரும் பயன், காலம் வாய்க்காவிட்டால் பொறுத்திருத்தல், பொறுத்திருப்பதால் வரும் சிறப்பு, பொறுத்திருக்கும் பருவத்தில் தன் நோக்கம், உணர்ச்சிகள் ஆகியவற்றை வெளிக்காட்டாமை, காலம் கூடியபொழுது வினரந்து செயல்படுதல், அச்செயல்முறை விளக்கம் இவற்றைக் காலமறிதல் அதிகாரம் விளக்குகிறது.


காலமறிதல் - குறள் கூறும் கருத்துகள்:


1. வலிய ஆந்தையைக் காகம் பகலில் வெல்லமுடியும்; ஆட்சியாளர்க்கு மாறுபாடு கொண்டோரை வெல்வதற்கான காலம் உணர்தல் இன்றியமையாதது எனச் சொல்கிறது.

2. பருவத்தோடு இயைந்து இருந்தால் மேற்கொண்ட முயற்சி தொடர் வெற்றி கண்டு செல்வம் நீங்காமல் தங்கும் என்கிறது.

3. தகுந்த உத்தியுடன் பொருந்திய காலத்தில் செய்தால் முடியாத செயல் என்று ஒன்றும் இல்லை எனச் சொல்வது.

4. எக்காலத்தில் எவ்விடத்தில் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு ஒரு குறிக்கோளைத் தொடங்கினால் அது எதுவானாலும் தவறாமல் நிறைவேறும் எனக் கூறுகிறது.

5. காலம் வரும்வரை காத்திருந்து பதற்றமின்றி தெளிந்த மனத்துடன் செயல்பட்டால் உலகை வெல்லலாம் எனச் சொல்கிறது.

6. பதுங்கி இருப்பது பருவம் பார்த்துப் பாய்வதற்காகவே என்கிறது.

7. சீண்டிப் பார்ப்போர் மீது அங்கேயே சினம் கொள்ளமால் அவர்களை வெல்லும் காலம் கருதிக் காத்திருப்பர் கூர்த்த அறிவுத்திறன் கொண்டவர் என்கிறது.

8. இன்று பணியச் செய்து நிமிர்ந்து செல்லும் பகைவன் காலம் மாறும்போது தலை குப்புறக் கவிழ்வான் என்பதைச் சொல்வது.

9. கிடைக்காத காலம் வாய்த்தபொழுது செய்யவேண்டிய அரிய செயல்களைச் செய்து முடித்துக் கொள்ள அறிவுறுத்துவது.

10. காலம் கூடியபொழுது எப்படி விரைந்து தவறில்லாமல் செயலாற்ற வேண்டும் எனச் சொல்வது.







 


    சுற்றம் என்பது சூழ்ந்திருத்தல் ஆகும். சுற்றந்தழாலாவது ஒருவர் தன் சுற்றத்தாரைப் பேணிக் கொண்டு தன்னிடத்திலிருந்து நீங்காமல் இருக்கச் செய்தலைச் சொல்வது. பிறப்பு(உறவு)ச்சுற்றம், இனச்சுற்றம், நட்புச் சுற்றம், தொழில்முறை(வினை)ச் சுற்றம் எனப் பல சுற்றங்கள் உண்டு. இவற்றோடு, பொதுவாழ்வில் தலைவன் பழகுகின்ற அரசியல் சுற்றம் பற்றிக் கூறுதல். இவ் அதிகாரக் கருத்துக்கள் அரசனுக்கு மட்டுமன்றி ஏனையோருக்கும் பொருந்தும்.



 சுற்றந்தழால் என்பதற்குச் சுற்றம் தழுவுதல் அல்லது ஆதரித்தல் என்பது பொருள். சுற்றத்தார் இயல்பு, அவரைப் பேணும் விதம், பேணுவதன் பயன், பிரிந்த சுற்றத்தை ஏற்றுக் கொள்ளுகிற முறைமை போன்றவற்றை இவ்வதிகாரம் விளக்குகிறது.

சுற்றம் ஆக்கம் தரும். பக்கபலமாக இருக்கும். ஒருவரது வாழ்வின் உள்வட்டத்தில் இருந்துகொண்டு அவரது செயல்பாட்டில் பங்கு கொள்வோர் அனைவரும் சுற்றமே. தமக்குள் கொள்ளல் கொடுத்தல் உறவு இல்லாமலிருந்தும், இவர்கள் தலைவனுக்கு உண்மையாகவும் பாதுகாவலாகவும் விளங்குவர். இவர்கள் தலைவனது செல்வம், செல்வாக்கு நீங்கிய காலத்திலும் அவனிடம் பழைமை பாராட்டுபவர்கள்.

சுற்றந்தழால் என்பது ஒருவர் சுற்றத்தாரை அணைத்துச் செல்வதும், சுற்றம் தன்னைத் தழுவ ஒருவர் நடந்து கொள்வதும் ஆகும். உள்வட்டத்திலிருந்து சுற்றம் வெளியேறாமல் தடுப்பதற்கான ஒரு அரசியல் தந்திரமாகவும் சுற்றம்தழுவுதல் அதாவது சுற்றம்தாங்குதல் கையாளப்பெறும்.

'சுற்றம் சூழ வாழ்தல் ஒருகலை. சுற்றம் பேணி வாழ்தலுக்கு இடையறாத அன்பு, நினைவில் வைத்துப் பாராட்டுதல், அன்பு காட்டுதல், ஒத்துப் போதல், குற்றம் பாராட்டாது இருத்தல் ஆகியன தேவையானது. நாடாள்வோருக்கும் சரி, தனி ஒருவராய் வெற்றி பொருந்திய வாழ்க்கை நடத்த விரும்புவோருக்கும்சரி சுற்றம் தேவை' என்று குன்றக்குடி அடிகளார் கூறுகிறார்

ஒருவர் நிறையச் சுற்றம் சூழ இருந்து வாழ்வதை வாழ்வு என்கிறார் வள்ளுவர் இக்கருத்துக்கள் நிறைந்ததாக இவ்வதிகாரம் அமைந்துள்ளது. 


சுற்றந்தழால் குறள் விளக்கம்:


1. செல்வம், செல்வாக்கு இழந்த நிலையிலும் முன்புபோலவே அன்புள்ளம் கொண்டு பழகுதல் சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு என்கிறது.

2. அன்பு குறையாத சுற்றம் கிடைக்குமானால், ஒழியாது மேன்மேலும் வளரும் செல்வங்கள் பலவற்றையும் அது கொடுக்கும் எனச் சொல்கிறது.

3. சுற்றத்தோடு மனம் கலந்து உறவாடாதவன் வாழ்க்கை கரையில்லாத குளத்தில் நீர் 'நிறைந்தால்' போல் எப்பொழுதும் வெறுமையாகவே இருக்கும் எனச் சொல்வது.

4. செல்வம் பெற்றதனால் ஒருவன் பெறும் பயனாவது, சுற்றத்தாரால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி நடந்து கொள்ளுதல் என்கிறது.

5. கொடுத்துதவும் தன்மை கொண்டவனாயும் இனியசொல் பேசுபவனாகவும் ஒருவன் வாழ்ந்தால், ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வருகிற சுற்றக் கிளைகளால் அவன் சூழ்ந்து கொள்ளப்படுவான் என்பதைக் கூறுவது.

6. அள்ளி வழங்குவான் சிறுதும் சினம் கொள்ளான் என்றால் அவனைவிட சுற்றத்தினரை உடையார் உலகத்தில் வேறு யாருமில்லை என்கிறது.

7. காக்கை தன் சுற்றத்தை அழைத்து உண்ணும்; அத்தன்மை கொண்டவர்க்கே சுற்றப் பெருக்கம் உண்டாகும் என்கிறது.

8. தகுதிபார்த்துச் சிறப்பு செய்பவனை அச்சிறப்பு பெறுவதற்காக பல சுற்றத்தார் அவனை விடாது அவனுடன் தங்கி இருப்பர் என்பதைச் சொல்வது.

9. தம்மவராக இருந்து தம்மை நீங்கிச் சென்ற சுற்றத்தார், காரணம் இல்லாமலே மீளவும் வரும்போது அவர்மீது விரும்பாமை உண்டாகும் எனக் கூறுவது.

10. இடம்பெயர்ந்து தன்னைவிட்டுச் சென்றவன் மீண்டும் ஒரு நோக்கம் கருதி வந்தால் தலைவன் அவன் தன்மையைப் பலபடியும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பான் என்கிறது திருக்குறள்.






கண்ணோட்டம்  


   கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம். இரக்கப்படுதலும் தண்டிக்கவேண்டிய சமயங்களில் சிறிது கருணை காட்டுதலும் இரக்கவுணர்வும் தயவு செய்தலும் கண்ணோட்டம் ஆகும்.


     கண்ணோட்டம் என்பது பிறரது துயரம்கண்டு இரங்கும் பண்பையும் பிறர் குற்றத்தை மன்னிக்கும் பெருந்தன்மையையும் குறிப்பதாகும். காணப்பட்டார் மேல் கண் ஓடியவிடத்து இவை உண்டாவதால் கண்ணோட்டம் எனப் பெயர் ஆயிற்று. மனித நேயத்தோடும் நாடு ஆளப்படவேண்டும் என்பதை விளக்குகிறது. இவ்வதிகாரம் நாடாள்வோர்க்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் பொருந்துவதாகும்.


கண்ணோட்டம் - மையக்கரு:


    கண்ணோட்டம் என்பது அன்பும், இரக்கமும் கொண்ட கண்ணின், உயிரோடு பிணைந்த, பண்பைக் குறிக்கும். துன்புற்ற ஒருவரைக் காணும்போது மனம் இளகி அவர்கள் துன்பத்தைக் களைதலையும் குற்றஞ் செய்த ஒருவர்பால் இயல்பாக இரங்கிக் குற்றத்தைப் பொறுத்தலையும், கண்ணோட்டம் எனக் கொள்வர். இப் பண்பு தனி மனிதருக்கு இன்றியமையாதது. சமுதாய அளவிலும் தேவையான ஒன்றாகும். சமுதாய வாழ்வில் நாடாள்வோன் முதல் அனைவரும் கண்ணின் வழியாக அன்பைச் செலுத்தி வாழவேண்டும். மக்கள் குற்றத்தின் நீங்கியும் குற்றத்தை நீக்கியும் வாழவேண்டும் என்னும் முயற்சியுடையோராகவே இருப்பர். முயற்சி எவ்வளவினதாயினும் குற்றம்நிகழ்தல் கூடும். அவ்வாறு நேர்ந்துவிட்டால் மன்னிக்கத்தக்கவற்றை மன்னிக்க வேண்டும் பண்பு அனைவர்க்கும் வேண்டும் என்பதை வற்புறுத்துவதே கண்ணோட்டமாகும். 



கண்ணோட்டம் - குறள் கூறும் கருத்துகள்:

1. இரக்கம் என்று சொல்லப்படுகின்ற பேரழகு இருப்பதனால் இவ்வுலகம் இருக்கின்றது என்கிறது.

2. உலக இயக்கம் கண்ணோட்டத்தில் நிகழ்கிறது; அப்பண்பு இல்லாதார் உள்ளமை நிலத்திற்குச் சுமையாகும் எனக் கூறுவது.

3. பாட்டுக்குப் பொருந்தாவிடில் இசை என்று சொல்லோம்; இரக்கமில்லாத இடத்து கண் என்னத்துக்கு? எனக் கேட்கிறது குறள்.

4. இரக்கத்தின் அளவறிந்து ஓடாத கண்கள் முகத்தில் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்? என வினவுகிறது.

5. கண்ணிற்கு அணியாய் உள்ளது கண்ணோட்டம்; அது இல்லையானால் கண் புண்ணென்று கொள்ளப்படும் எனக் கூறுகிறது.

6. கண்ணிருந்தும் இரக்கம் காட்டாதவர் மண்ணோடு பொருந்திய மரத்தினை ஒப்பர் என்கிறது.

7. இரக்க உணர்வு இல்லாதவர் கண் இல்லாதவர்; கண்ணைப் பெற்றிருப்பவர் கண்ணோட்டம் இல்லாமலும் இருக்கமாட்டார்கள் என்பதைச் சொல்கிறது.

8. செயற்பாடு கெடாமல் இரக்கம் காட்ட வல்லவர்களுக்கு உரியது இவ்வுலகம் என்கிறது.

9. தண்டிக்கும் வலிமை உடையவர்க்கும், இரக்கம் காட்டிப் பொறுத்து நல்வழிப்படுத்தும் குணமே தலையாயது எனக் கூறுகிறது.

10. யாவரும் விரும்பக்கூடிய நாகரிகத்தை வேண்டுபவர் நஞ்சு ஊற்றிக் கொடுத்தலை நேரில் கண்டும் அதை உண்டு அமைதியுறுவர் என்கிறது.



இலக்கண வரலாறு

 தமிழ் இலக்கணம் ஆனது எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என ஐந்திலக்கண மரபைக் கொண்டது.


ஐந்திலக்கண மரபைக் கொண்ட இலக்கண வரலாற்றில் தொல்காப்பியம் வீரசோழியம் தொன்னூல் விளக்கம் இலக்கண விளக்கம் முத்துவீரியம் சுவாமிநாதம் ஆகியவை ஐந்து இலக்கணங்களைப் பற்றிப் பேசுகிறது.


ஒரே ஒரு இலக்கண மரபை கொண்ட நூல்களாக அதாவது சொல் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூல்களாக  இலக்கணக் கொத்து பிரயோக விவேகம் திகழ்கின்றன

எழுத்து, சொல் என்ற இரண்டு இலக்கண நூல்களாக நன்னூலும் நேமிநாதமும் திகழ்கின்றன

பொருள் இலக்கணத்தில் அகப்பொருள் பற்றி நம்பியகப்பொருளும் புறப்பொருள் பற்றி புறப்பொருள் வெண்பாமாளையும் பேசுகின்றன


அகப்பொருளில் களவு பற்றிக் களவியற் காரிகை என்ற நூல்

யாப்பிலக்கணத்தில் யாப்பெருங்கலம் யாப்பருங்கலக்காரிகை யாப்பு நூல் அவிநயம் யாப்பதிகாரம்


யாப்பின் உறுப்புகள் அடி நூல்

தொடையதிகாரம்

பாக்கள் குறித்த கட்டளைக்கலித்துறை விருத்தப்பாவியல்


எனத் தமிழ் இலக்கணம் மரபானது பரந்து விரிந்ததாகத் திகழ்கிறது

UGC NET Tamil TNPSC Tamil

அணியிலக்கணத்தில் யாப்பிலக்கணத்தின் செல்வாக்கு

தமிழ் இலக்கண மரபானது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றிலக்கண மரபிலிருந்த எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கண மரபாக வளர்ச்சி...