Thursday, January 19, 2023

அணியிலக்கணத்தில் யாப்பிலக்கணத்தின் செல்வாக்கு

தமிழ் இலக்கண மரபானது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றிலக்கண மரபிலிருந்த எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கண மரபாக வளர்ச்சியடைந்துள்ளது. மூன்றிலக்கண மரபில் வைத்துப் பேசப்படும் இலக்கண நூல்கள் அதன் பாடுபொருளில் யாப்பும் அணியும் இடம்பெற்றுள்ளதை வைத்து ஒரு இலக்கண மரபில் மற்றொரு இலக்கணக் கூறுகளின் தன்மை இடம்பெறுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் இருப்பதையே இவ்விலக்கண மரபுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவ்வகையில் தொல்காப்பிய மரபு மூன்றிலக்கண மரபில் வைத்து எண்ணத்தக்க சூழலில் அதன் கட்டமைப்பில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என அனைத்து இலக்கணக் கூறுகளும் இடம்பெற்றுள்ளது என்பதை இங்குச் சுட்டத்தக்கது. இப்பின்னணியிலிருந்து நோக்குகையில் ஒவ்வொரு இலக்கணக் கூறுகளும் அடிப்படையில் ஏதோ ஒன்றைச் சார்ந்த நிலையில் தோன்றி, பிறகு இவ்விலக்கண மரபானது வளர்ச்சியடைந்துள்ளதாக எண்ண இடம்தருகிறது. இக்கருத்தாக்கத்தின் அடிப்படையில் சொல்லிலக்கணத்தில் யாப்பின் செல்வாக்கு குறித்து வீரகத்தி எழுதிய கட்டுரையை இங்குச் சுட்டுவது மிகவும் பொருத்தமுடையதாகும். யாப்பியல் குறித்த ஆய்வுகளில் பிற இலக்கணக் கூறுகளில் யாப்பின் செல்வாக்கு இடம்பெற்று விளங்குவதைக் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தேவையை அக்கட்டுரையின் வழி உணரமுடிகிறது. அதன் தொடர்ச்சியாக அணியிலக்கணத்தில் யாப்பிலக்கணக் கூறுகள் எவ்வாறு இடம்பெற்று சிறக்கிறது என்பதை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது. இக்கட்டுரையில் ஆய்வு மூலங்களாக அணியிலக்கண நூல்களும் தொல்காப்பியச் செய்யுளியல் மற்றும் தொல்காப்பியச் செய்யுளியலுக்கு எழுந்த உரைகளும் யாப்பிலக்கண நூல்களும் யாப்பிலக்கணத்திற்கு எழுந்த உரைகளும் தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் அணியிலக்கண கூறுகளில் யாப்பிலக்கணத்தின் அமைப்புகள் எடுத்தியம்பப்படுகின்றன. அணி இலக்கணத்திற்குத் தனிச்சிறப்பு உள்ளது. மற்ற இலக்கணங்கள் கவிஞனுக்கு வழிகாட்டும். ஆனால் அணி இலக்கணம் கவிஞருக்கும் கவிதையைப் படிப்பவர்க்கும் வழிக்காட்டும். அணி இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கண மரபுகளில் அணி இலக்கணம் என்பது கவிதையை அழகுப்படுத்தும் ஒரு கூறாக விளங்குகிறது. யாப்பிலக்கண நிலையில் கவிதை உருவாகிவிடுகிறது. அதற்கு பிறகு அணியின் தேவை கவிதையை மேலும் அழகுப்படுத்தும் தன்மையில் நிலைகொள்கிறது. அணியிலக்கணம் பொதுவாகப் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என்ற பிரிவுகளைக் கொண்டமைகிறது. பொருளணியியல் சொல்லணியியல் ஆகிய இரண்டு பெரும் பிரிவுகளே அணியியலில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மாலை மாற்றே சக்கரம் சுழிகுளம் ஏக பாதம் எழுகூற் றிருக்கை காதை கரப்பே கரந்துறை பாட்டே தூசம் கொளலே வாவ னாற்றி கூட சதுர்த்தம் கோமூத் திரியே ஓரெழுத் தினத்தால் உயுர்ந்த பாட்டே பாத மயக்கே பாவின் புணர்ப்பே ஒற்றுப் பெயர்த்தல் ஒருபொருட் பாட்டே சித்திரப் பாவே விசித்திரப் பாவே விகற்ப நடைய வினாவுத் தரமே சருப்பதோ பத்திரம் சார்ந்த எழுத்து வருத்தனம் மற்றும் வடநூற் கடலுள் ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி விரித்து முடித்த மிறைக்கவிப் பாட்டே உருவக மாதி விரவியல் ஈறா வருமலங் காரமும் வாழ்த்தும் வசையும் கவியே கமகன் வாதி வாக்கியென் றவர்கள் தன்மையும் அவையின தமைதியும் பாடுதல் மரபும் தாரணைப் பகுதியும் ஆனந்தம் முதலிய ஊனமும் செய்யுளும் விளம்பனத் தியற்கையும் நரம்பின் விகற்பமும் பண்ணும் திறமும் பாலையும் கூடமும் எண்ணிய திணையும் இருதுவும் காலமும் எண்வகை மணமும் எழுத்தும் சொல்லும் செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும் தந்திர உத்தியும் தருக்கமும் நடமு முந்துநூல் முடிந்த மு அந்தாதி மடக்கு கயலேர் தரவருங் கடிபுனற் காவிரி காவிரி மலருகக் கரைபொரு மரவம் மரவம் பூஞ்சினை வண்டொடுஞ் சிலம்பும் சிலம்புசூழ் தளிரடித் திருமனைக் கயலே (தண்டி.உரை.ப.164) ஓருயிர் மடக்கு தண்டியலங்காரத்தில் இடம்பெறும் ஓருயிர் மடக்கு என்பது ஒரு உயிர் எழுத்து மடக்காக அதாவது திரும்ப திரும்ப இடம்பெறுதல். அமல லகல மகல லபய கமல பவன மவள வமல மடர வளக வதன மடர மதன என்ற பாடலில் அகர உயிர் எழுத்து மடக்காய் வந்துள்ளதால் இப்பாடலை ஓருயிர் மடக்கிற்குச் சான்றாகத் தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது. ஒருவருக்கப்பாட்டு எனக் குறிப்பிட்டுத் தண்டியலங்காரம் கூறும் சான்று, காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்கக் – கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா. வல்லினப் பாட்டிற்குச் சான்றாக, துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோட றொடுத்த தொடைகடுக்கை பொற்போற் – பொடித்துத் தொடிபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக் கடிபடைத்துக் காட்டிற்றுக் காடு மெல்லினப் பாட்டிற்குச் சான்றாக, மானமே நண்ணா மனமென் மனமென்னு மானமான் மன்னா நனிநாணும் – மீனமா மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினு மானா மணிமேனி மான் (தண்டி.உரை.ப.169) என்ற பாடலைக் குறிப்பிடுகிறது. இடையினப் பாட்டிற்குத் தண்டியலங்காரம், யாழியல் வாய வியலள வாயவொலி யேழிய லொல்லாவா லேழையுரை – வாழி யுழையே லியலா வயில்விழி யையோ விழையே லொளியா லிருள் என்ற பாடலைச் சான்று காட்டுகிறது. முதலடி முதன்மடக்கு என்பதற்குச் சான்றாக, துறைவா துறைவார் பொழிற்றுணைவர் நீங்க உறைவார்க்கு முண்டாங்கொல் சேவல் – சிறைவாங்கிப் பேடைக் குருகாரப் புல்லும் பிறங்கிருள்வாய் வாடைக் குருகா மனம் என்ற பாடலைத் தண்டியலங்காரம் சான்றுகாட்டுகிறது. நான்கடி முழுதுமடக்கு என்பதற்குச் சான்றாக, வான கந்தரு மிசைய வாயின வான கந்தரு மிசைய வாயின வான கந்தரு மிசைய வாயின வான கந்தரு மிசைய வாயின என்ற பாடலைத் தண்டியலங்காரம் சான்றுகாட்டுகிறது. துணைநூற்பட்டியல் அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் பழைய விருத்தியுரையுடன், மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை - பதிப்பாசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, மறுபதிப்பு 1998. தண்டி, தண்டியலங்காரம், அ.குமாரசாமிப்புலவர் புதுக்கியது, கோ.விசயராகவன், பதிப்பாசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதற்பதிப்பு, 2015. தண்டியாசிரியர், தண்டியலங்காரம் முழுவதும் மூலமும் பழையவுரையும், வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் கம்பெனி, திருவல்லிக்கேணி, சென்னை, 1962. தண்டி, தண்டியலங்காரம் மூலமும் தெளிவுரையும், வ.த.இராம.சுப்பிரமணியம் தெளிவுரையாசிரியர், மு.சண்முகம் பிள்ளை பதிப்பாசிரியர், முல்லை நிலையம், சென்னை, முதற்பதிப்பு ஏப்ரல், 1998 மறுபதிப்பு, 2015

தமிழ் நிகண்டு வரலாற்றில் சேந்தன் திவாகரம்

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கண மரபில் ஆறாம் இலக்கணமாக நிகண்டுகளைச் சுட்டுவர். 19ஆம் நூற்றாண்டில் வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அறுவகை இலக்கணத்தில் புலமை இலக்கணமாக ஆறாவது இலக்கணமாகச் சுட்டப்படுவதற்கு முன்பு வரை நிகண்டுகளே அவ்விடத்தைப் பிடித்திருந்தன. தமிழ் மொழியின் வளத்தையும் சொற்களின் செறிவையும் பொருள் கொள்ளும் நுட்பத்தையும் நிகண்டு நூல்கள் காலந்தோறும் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளன. நிகண்டு என்னும் சொல்லுக்குத் தொகுதி அல்லது கூட்டம் என்று பொருள். திணை வகைமையில் அமைந்த பெயர்களையும் வினை பற்றிய பெயர்களையும் பாகுபாடு செய்து தொகுத்துக் கூறுவதோடு அச்சொற்கள் குறிக்கின்ற பொருள்களையும் நிகண்டுகள் வரையறுத்துக் கூறுகின்றன. நிகண்டு என்னும் பெயர் வழக்கு முதன்முதலில் நிகண்டு வடமொழியில் வேதத்திற்கு அங்கமாய், வைதீகச் சொற்களின் பொருட்களை உணர்த்தும் கருவி நூலுக்கு மட்டுமே சிறப்பாகச் சுட்டப்பட்டது. தமிழில் நிகண்டு நூலை உரிச்சொல் உரிச்சொல்பனுவல் என்றெல்லாம் குறிப்பிடுவர். காங்கேயர் எழுதிய நிகண்டு நூலினை உரிச்சொல் நிகண்டு என்று குறிப்பிட்டுள்ளார். உரிச்சொல், நிகண்டு இரண்டையும் ஒருங்கே வைத்துச் சுட்டியுள்ளது இத்தொடர்பில் இணைத்தெண்ணத்தக்கது. உரிச்சொல்லை வேர்ச்சொல், பகுதி, குறைச்சொல், அடை என்று பலவிதமாக உரையாசிரியர்களும் ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ள நிலையிலிருந்து வேறுபட்டு அவற்றைப் பொருளுக்குரிய சொற்களாக தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், செ.வை.சண்முகம் ஆகியோர் குறிப்பிட்டிருந்தாலும் அவர்கள் உரிச்சொற்களை அகராதிச் சொற்களாக முழுமையாக ஏற்கவில்லை. இந்தக் குறைச்சொற்களாகிய உரிச்சொற்களில் பொருள்வேற்றுமை செய்யும் உரிச்சொற்களும் உள்ளன. தனிச்சொல்லாக வந்து தமக்கேற்ற பயனிலை கொள்ளும் உரிச்சொற்களும் குரு விளங்கிற்று என்பது போல உள்ளன. மூன்றாவதாக வேறு சில உரிச்சொற்கள் சில போது அடைகொளியாகவும், சில போது அடையாகவும் செங்கேழ், கேழ்கிளர் அகலம் என்பன போல வருவனவும் உள்ளன. (உரிச்சொல், இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் – 1, மொழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், பக்.131,132) என்பதன் மூலம் புலனாகிறது. நிகண்டு என்னும் சொல் முதன்முதலில் இறையனார் அகப்பொருள் உரையில் இடம்பெற்றுள்ளதாக வ.ஜெயதேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (வ.ஜெயதேவன், தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு, ப.79) மேலும் அவர், அகராதி என்ற சொல் முதன்முதலில் திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டுகிறார். (மேலது, ப.80) தொல்காப்பியம் தொல்காப்பியச் சொல்லதிகார இடையியல், உரியியல் பகுதிகளில் சொற்பொருள் உணர்த்தும் தன்மை விளக்கப்படுகிறது. மேலும் பொருளதிகாரத்தின் மரபியலில் இம்மரபு இடம்பெறுவதையும் காணலாம். தொல்காப்பியம் நிகண்டுகளின் அமைப்பிற்கும் தோற்றத்திற்கும் முன்னோடியாய் திகழ்கின்றது. இலக்கிய, இலக்கணப் பயிற்சிக்கு நிகண்டு நூல்களே கருவி நூல்களாகத் திகழ்கின்றன. நிகண்டு நூல்களில் இடம்பெற்றுள்ள சொற்களின் தொகுதியால் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த பல்வேறு பழக்க வழக்கங்களும் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. இப்பின்னணியில் திவாகர நிகண்டில் பண்பாட்டுத் தொடர்பாக ஆய்வு செய்வதற்கான களங்கள் உள்ளதாக அதன் பதிப்பாசிரியர் நூலின் முன்னுரையில் சுட்டிச்செல்கிறார். திவாகரப் பொருட்பாகுபாட்டுக்குத் தொல்காப்பியம் அடிப்படையாகவும் பிற நிகண்டுகளின் பொருட்பாகுபாட்டுக்குத் திவாகரம் அடிப்படையாகவும் விளங்குகிறது. நிகண்டுகளின் பொருட்புலப்பாகுபாடு பீட்டர் மார்க் ரோஜெட்டின் சொற்கருவூலப் (Thesaurus) பாகுபாட்டை ஒத்துள்ளதாக வ.ஜெயதேவன் குறிப்பிட்டுள்ளார். (வ.ஜெயதேவன், தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு, ப.116) மேலும் அவர், நிகண்டுகளிலேயே அகர நிரல், குறிப்பு நோக்கீட்டு முயற்சிகள் தோன்றத் தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார். (மேலது, ப.117) நிகண்டு அமைப்பு நிகண்டுகளின் அமைப்பினை இலக்கண நூல்களில் கண்ணுற முடிகிறது. யாப்பருங்கல விருத்தியுரையில் இடம்பெற்றுள்ள சில நூற்பாக்கள் நிகண்டுகளைப் போலத் தொகுத்துரைக்கும் நிலையில் அமைந்துள்ளன. சான்றாக, யாப்பருங்கல விருத்தியுரைக்காரர் திரிசொற்களுக்கு எடுத்துக்காட்டுகள் தரும் இடத்தில், பைஞ்ஞீலம் பைதிரம் விரற்றலை யோர்பித்தை பூழிவம் பீளை துருவையனல் தொடுப்பகை பிறடி கருவுள நவிரல் வசிதலையல் நிவப்பு செப்பிய பிறவுந் திரிசொல் லாகும். எனவும் விலங்குகளின் ஆண், பெண் இளமைப் பெயர்களைக் கூறுமிடத்து, பெயரிவை மும்மையும் பிறவுமிப் பொருட்கண் இயைபெதி ரியலு மென்றுணர்ந் தியையக் குறியொடு காரணங் கொளவகுத் தொழிந்தது அறிய உரைப்போன் ஆசிரி யன்னே எனவும் கலிப்பா என்பதன் பொருளைக் கூறுமிடத்து, கலித்தல் கன்றல் கஞறல் பம்மல் எழுச்சியும் பொலிவும் எய்தும் பெயரே கம்பலை சும்மை யழுங்கல் கலிமுழக் கென்றிவை யெல்லாம் அரவப் பெயரே எனவும் இடம்பெற்றுள்ள இடங்கள் இத்தொடர்பில் இணைத்தெண்ணத்தக்கது. நிகண்டுகளின் உருவாக்கத்திற்கு இதுபோன்ற இலக்கண உரைகளில் இடம்பெற்றுள்ள இடங்களையும் ஒப்பிட்டு நோக்குகையில் நிகண்டுகளின் தோற்றத்திற்கு இவை அடித்தளமாக அமைந்துள்ள நிலையினை அறியமுடிகிறது. திவாகரம் தமிழ்மொழியில் இதுவரை கிடைத்திருக்கும் நிகண்டு நூல்களுள் திவாகரத்தை முதலாவதாகக் குறிப்பிடலாம். இதனை இயற்றிய ஆசிரியர் திவாகரர். இவரை ஆதரித்து இந்நூலை இயற்றச் செய்தவர் சேந்தன் என்பவர். அவர் பெயராலேயே சேந்தன் திவாகரம் என்று இந்நூல் அழைக்கப்படுகிறது. திவாகரர் சமண சமயத்தைச் சார்ந்தவர். காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டாகும். இந்நிகண்டு பன்னிரண்டு தொகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதல் பத்துத்தொகுதிகளில் ஒருபொருள் குறித்த பலபெயர்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. பதினோராவது தொகுதி பல்பொருள் குறித்த ஒரு பெயர்ச் சொற்களுக்குரியதாக அமைகிறது. இறுதி தொகுதி தொகைப் பெயர்கள் குறித்ததாக அமைந்துள்ளது. தெய்வப்பெயர்த் தொகுதி முதல் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர் தொகுதி வரையில் 12 தொகுதிகள் கொண்டது. ஒவ்வொரு தொகுதியும் ஆசிரியர் வரலாறும் நூல் வரலாறும் சுட்டும் நூற்பாவோடு முடிவுடைகிறது. கி.பி.17ஆம் நூற்றாண்டில் ஆசிரிய நிகண்டு எழுதிய ஆண்டிப் புலவர் தமது முன்னுரையில், முந்துள திவாகரம் பிங்கல நிகண்டுசீர் முந்து காங்கயன் உரிச்சொல் முறைபெய காயகரம் பகரும் அகராதியிவை முற்றும் ஒன்றாய்த் திரட்டி... என்று சுட்டியுள்ளார். பிங்கல நிகண்டைக் காட்டிலும் திவாகரத்திற்கு முதன்மை தரப்பட்டுள்ளதன் மூலம் பிங்கலத்தைக் காட்டிலும் திவாகரமே முந்தியது எனக் கருத இடம்தருகிறது. தெரிதரு பிங்கலம் திவாகரம் முதலாம் பரவிய நிகண்டு பலஎடுத் தாராய்ந்து எனச் சிதம்பர ரேவண சித்தர் உரிச்சொல் நிகண்டின் பாயிரப் பகுதியில் சுட்டியுள்ளார். திவாகர நிகண்டின் பாகுபாட்டினை அடியொற்றியே பிங்கலம், சூடாமணி நிகண்டு, உரிச்சொல், கயாதரம் முதலிய நிகண்டுகளும் அமைந்தன. திவாகர நிகண்டின் முதல் நூற்பா, அங்கதம் தோளணி அரவு மாகும் இறுதி நூற்பா, வேளாண்மை உபகாரம் ஈகையும் விளம்பும் என்பதாகும். திவாகரம் – நூற்பா யாப்பு நிகண்டு எழுதுவதற்கு ஆசிரியம், வெண்பா, கலித்துறை, விருத்தம் ஆகிய யாப்புகள் முறையே கையாளப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தைப் பின்பற்றி திவாகர நிகண்டு நூற்பா யாப்பில் எழுதப்பட்ட நிலையில், பின்வந்த நிகண்டுகள் அவற்றிலிருந்து மாறுபட்டன. வெண்பா மனனம் செய்ய எளிமையானது. இதன் எதுகை, மோனை தளை முதலியவை பாவின் வடிவத்தை மிகவும் எளிதாக நெஞ்சில் நிறுத்த வல்லன. கலித்துறை, விருத்தம் போன்ற வடிவங்களும் நிகண்டுகளில் மிகுதியாக இடம்பெற்று சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. காலத்திற்கு ஏற்ப அதன் தேவையைக் கருத்தில் கொண்டு அதனை நிறைவு செய்யும் நோக்கத்தோடு நிகண்டுகளின் யாப்பமைப்பு உருவாக்கப்பட்டுள்ளன. திவாகரத்தைப் போல் பின்தோன்றிய நிகண்டுகள் பல நூற்பா யாப்பினால் இயற்றப் பெற்றுள்ளன. அகராதி நிகண்டு, பல்பொருள் சூடாமணியின் இரண்டாம் காண்டம், கயிலாச நிகண்டு சூடாமணி, பொதிகை நிகண்டின் இரண்டாம் பகுதி, பொருட்டொகை நிகண்டு, ஆகியன நூற்பா யாப்பில் தோன்றிய நிகண்டுகளாகும். நிகண்டு இயற்றுதற்கு நூற்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம் ஆகிய பாவடிவங்கள் முறையே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் மனப்பாடம் செய்வதற்கு ஆசிரியம் அவ்வளவு ஏற்றதல்ல என்ற காரணத்தால் நூற்பா யாப்பில் அமைந்த திவாகரம், பிங்கலத்தை ஆகியவற்றின் பாவடிவ முறையிலிருந்து பின்வந்த நிகண்டுகள் வேறுபட்ட பாவடிவங்களைக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. தொல்காப்பியம் முதலான பண்டைய நூல்களில் அமைந்திருந்த எதுகை நயமிக்கச் சொல்லாட்சி முறைகள் நன்கு வளர்ச்சி பெற்று நிகண்டுகளில் அமைந்துள்ளன. திவாகரத்தின் பதினோராம் தொகுதியில் உள்ள நூற்பாக்களை எதுகை முறையில்தான் ஆசிரியர் இயற்றியிருக்கிறார். ஊறே யிடையூறு முற்றறி புலனும் (280) நூறே பொடியு நூறு மாகும் (281) ஏணி யுலகு மெல்லையு மாகும் (282) சேணே வுயர்வு நீளமு மாகும்(283) பதினோராம் தொகுதியில் உள்ள நூற்பாக்கள் பெரும்பாலும் இவ்வாறே அமைக்கப் பெற்றுள்ளன. திவாகரம் - பதிப்பு நூல்களுக்கு எல்லாம் முதலாவதாகவும் வழிகாட்டியாகவும் விளங்குவது திவாகரர் செய்த திவாகரம் என்னும் நிகண்டு. தொல்காப்பியர் தம் நூலில் சுட்டிய சொற்பொருள் முறைகளை அடியொற்றி அதுபோலவே நூற்பாவால் இந்நிகண்டு அமைக்கப்பட்டுள்ளது. கி.பி.9ஆம் நூற்றாண்டு அளவில் இந்நிகண்டு தோன்றியது, இது தமிழில் முதலில் தோன்றிய நிகண்டு ஆதலால் இதனை ஆதி திவாகரம் என்றும் வழங்குவர். இதுவே பிங்கலம், உரிச்சொல் நிகண்டு, கயாதர நிகண்டு, சூடாமணி நிகண்டு முதலாகக் காலந்தோறும் நிகண்டுகள் வளர்ந்துவருவதற்கு வழிகாட்டியுள்ளது. திவாகரமும் சூடாமணி நிகண்டும் அதிகமாகப் பயிலப்பட்டுவந்துள்ளதாக மு.சண்முகப்பிள்ளை குறிப்பிடுகிறார். திவாகரமும் சூடாமணியும் மிகுதியாகப் பலரும் போற்றிக் கற்றமையால் இந்நிகண்டுகளுக்கான ஏட்டுச் சுவடிகளும் பலவாகப் பல பகுதிகளிலும் உள்ளன. எனினும் திவாகரச் சுவடிகள் முழுமையும் முறையாகப் பரிசோதிக்கப் பெற்றுச் செவ்விய முறையிலான ஒரு பதிப்பு இன்னும் வெளிவரவில்லை. (மு.சண்முகப் பிள்ளை, திவாகரப் பதிப்பு வரலாறு, பத்தாவது கருத்தரங்கு கோவை, ப.221) 1839ஆம் ஆண்டு திவாகரத்தின் முதற்பதிப்பானது சென்னைக் கல்விச் சங்கத்துப் புலவர் தாண்டவராய முதலியார் அவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இவருடைய இப்பதிப்புப் பணியைக் குறித்து ஆராய்ந்த மு.சண்முகப் பிள்ளை சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அப்பகுதி வருமாறு: திவாகர நிகண்டை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் தாண்டவராய முதலியார். இவர் சென்ற நூற்றாண்டில் சென்னைக் கல்விச் சங்கத்தில் தமிழ்த் தலைமைப் புலவராய் விளங்கியவர். அட்டாவதானம் வீராசாமி செட்டியார், திருவேங்கடசால முதலியார், விசாகப் பெருமாளையர், கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை, நயனப்ப முதலியார் முதலியோர்களும் தாண்டவ ராய முதலியரோடு இச்சங்கத்தில் தமிழ்ப் புலவராய்ச் சிறந்து விளங்கியவர்கள் ஆவர். கல்வித்துறைக்குப் பயன்படத்தக்கப் பல நூல்களையும் இச்சங்கத்தின் வாயிலாக இவர்கள் வெளியிட்டு வந்துள்ளார்கள். இந்த வகையில் அகராதிகளுக்கெல்லாம் மூலமாய் விளங்கியதும் சொற்பொருள் விளக்கநூலாய் அமைந்ததுமான திவாகரத்தைத் தலைமைப் புலவர் தாண்டவராய முதலியார் பதிப்பிக்க எடுத்துக் கொண்டார் என்று தோன்றுகிறது... இவர் திவாகர ஏட்டுச் சுவடிகளை ஒத்துப்பார்த்துப் பிழைகளைக் களைந்து செம்மைப்படுத்திப் பதிப்பிக்க முற்பட்டார். திவாகரப் பகுதிகளில் சில இடங்களில் புதுச் சூத்திரங்களையும் இவர் செய்து சேர்த்துள்ளார். தாம் சேர்த்த புதுச் சூத்திரங்களுக்கு உடுக்குறியிட்டுக் காட்டியுள்ளார். (மு.சண்முகப் பிள்ளை, திவாகரப் பதிப்பு வரலாறு, பத்தாவது கருத்தரங்கு கோவை, பக்.221-222) திவாகரத்திற்குக் கிரவுன் வடிவில் அமைந்த பதிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் முதல் பக்கம் இல்லாமையால் வெளியான ஆண்டு முதலிய விவரம் தெரிய இயலவில்லை. இந்தப் பதிப்பில் எ,ஒ எழுத்துக்கள் புள்ளியிட்டுப் பதிப்பிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலும் 1850க்கு முற்பட்ட பதிப்பாக இது இருத்தல் கூடும் என மு.சண்முகப்பிள்ளைக் குறிப்பிட்டுள்ளார் (மேலது,ப.222). மேலும் திவாகரத்திற்கு எழுந்த சில பதிப்புகளைப் பற்றி மு.சண்முகப்பிள்ளை எடுத்துரைத்துள்ளார். அப்பகுதி வருமாறு: பிரிட்டிஷ் மீயூசியம் கேட்லாக்கிலிருந்து திவாகரரின் திவாகரம் T.குப்பன் அய்யங்கார் என்பவரால் சென்னையிலிருந்து 1859ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட விவரம் தெரியவருகிறது. 1886ஆம் ஆண்டு தஞ்சாவூர் சின்னகன்னைய செட்டியார் என்பவரால் சென்னையில் வெளியிடப்பட்ட பதிப்பு ஒன்றுள்ளது... இதற்குப் பின் வந்த பதிப்புகளின் முதற்பக்கத்திலும் பதிப்பாசிரியர் அச்சுக்கூடப் பெயர்கள் வேறுபட்ட போதிலும் பெரும்பகுதி அப்படியே காணப்படுகிறது. ஆதலால், பின்வந்த பதிப்பாசிரியர் எல்லோருமே முந்திய பதிப்பை அப்படியே பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. எனினும் முற்பதிப்பில் புதுச்சூத்திரங்களுக்குக் காட்டப்பட்ட உடுக்குறியைக் கைவிட்டு விட்டனர். இதனால் எவை எவை திவாகரரின் சூத்திரம் எவை எவை தாண்டவராய முதலியார் உள்ளிட்ட கல்விச் சங்கத்து வித்துவான்கள் சேர்த்த சூத்திரம் என்பது தெரியமல் ஆகிவிட்டது.... 1886க்குப் பின்னும், 1897இல் சென்னை குருநாத சுவாமிகளின் பதிப்பு வந்துள்ளது. இந்த நூற்றாண்டில் கோ.லோகநாத முதலியார் 1904இல் தமது மனோன்மணி விலாச அச்சுக் கூடத்தில் ஒரு பதிப்பு வெளியிட்டுள்ளார். பின்னரும் 1917,1924 முதலிய ஆண்டுகளிலும் இவ்வச்சுக் கூடப் பதிப்பு தொடர்ந்து வந்துள்ளது. திருப்போரூர் டி.கோபாலநாயகர் அவர்களின் சென்னை கோல்டன் எலெக்டிரிக் பிரஸ்ஸில் 1923இல் ஒரு பதிப்பு வெளிவந்துள்ளது. 1958இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் பதிப்பு வெளியானது. இதுவே இப்போது கிடைக்கும் அச்சுப் பதிப்பாகும். (மேலது,பக்.224-225) இவ்வாறு திவாகர நிகண்டு அதிகப் பதிப்புகளைப் பெற்றமைந்துள்ளதன் மூலம் அதன் பயில்நிலையை அறிந்துகொள்ள முடிகிறது. உள்ளடக்கம் இன்றுள்ள நிகண்டு நூல்களுள் திவாகரமே பழையானது. இந்த நிகண்டின் அமைப்பு முறையே பிற்கால நிகண்டுகளுக்கு எல்லாம் மூல வடிவமாக அமைந்து நிற்கிறது. இந்நிகண்டு பின்வரும் பன்னிரு தொகுதிகளைக் கொண்டது. தெய்வபெயர், மக்கட்பெயர், விலங்கின்பெயர், மரப்பெயர், இடப்பெயர், பல்பொருட்பெயர், செயற்கை வடிவப்பயர், பண்புப்பெயர், செயல்பற்றிய பெயர், ஒலி பற்றிய பெயர், ஒருசொல் பல்பொருட்பெயர், பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர் என்ற முறைமையில் அமைந்துள்ளது. ஒருசொல் பல்பொருள் பெயர்த்தொகுதி திவாகர நிகண்டில் இடம்பெற்றுள்ள முதல் பத்துத் தொகுதிகளும் ஒரு பொருள் பல்பெயர்த் தொகுதிகளாகும். இத்தொகுதியில் 377 சொற்களுக்குப் பொருள் தரப்பட்டுள்ளது. இவற்றுள் ஒரே பொருளுடைய சொல் எதுவும் இல்லை. குறைந்தது இரண்டு பொருள்கள் உடைய சொற்களும் பெரும்பான்மை 23 பொருள்கள் உடைய சொல்லும் இடம்பெற்றுள்ளன. பண்டைக் காலத்தில் தமிழகத்தில் கணிதம் எவ்வளவு வளர்ச்சி பெற்று விளங்கியது என்பதை, நூலே, எண்ணும் பனுவலும் ஆகும் என்னும் நூற்பாவால் அறியலாம். ஆரியர் என்றால் இன்றைய வழக்கில் உயர்ந்தவர் – மேலானவர் என்று மதிப்பாகச் சுட்டப்பட்டதாகக் கருதுகின்ற நிலையில், தாழ்ந்தவர் – மிலேச்சர் என்னும் பொருள் தருகிற நூற்பா திவாகரத்தில் இடம்பெற்றுள்ளது. இடப்பெயர்த்தொகுதி மக்கள் வாழுகின்ற இடங்கள் மட்டுமின்றி ஏழேழு உலகங்கள் தொடர்பான செய்திகளும் இந்த இடப்பெயர்த்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. நீரும் வயலும் சூழ்ந்த ஊரினைத் தான் கிராமம் என்ற சொல் குறிப்பிடுகிறது. சுரந்த நீரும் வயலும் சூழ்ந்தஊர் கிராம மாகக் கிளக்கப் படுமே ஐந்நூறு குடும்பங்கள் ஒரு ஊரில் வாழ்ந்தால் அக்கிராமத்தைப் பெருங்கிராமம் என்று குறிப்பிடலாம். குடி ஐந்நூறுக்குக் குறைவற நிறைந்தது பெருங்கிராமம் எனப் பேசப் படுமே கடுமையான வழியைப் பற்றிக் குறிக்க அத்தம், கடம், கடறு, தூம்பு, சுரம், அருநெறி முதலிய சொற்களைச் சுட்டுகின்றனர். பல வழிகள் பிரிந்து செல்லும் இடத்திற்குக் கவலை, கவர்நெறி என்று பெயர்களைச் சுட்டுகின்றனர். கல்லூரிக்கும் அடுத்ததாகப் பெரிய கல்வி நிலையத்தைப் பல்கலைக்கழகம் என இன்று கூறுகிறோம். கழகம் என்பது சூது ஆடும்இடம் என்னும் பொருளில் திருக்குறளில் சூது என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. கால மாற்றத்தின் விளைவால், கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார் (குறள்.) பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் (குறள்.) என்ற இரண்டு குறட்பாக்கள் கழகம் என்ற சொல்லைச் சூதாடுகளமாக வள்ளுவர் சுட்டியுள்ளார். இவ்வாறு அந்தக் காலத்தில் சொற்களின் பொருண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அறியமுடிகிறது. செயற்கை வடிவப் பெயர்த்தொகுதி பலவகையான வாத்தியங்கள் இசைக்கருவிகளின் பெயர்கள் சுட்டப்பட்டுள்ளன. வீடுகளில் பயன்படுத்தப்படும் பலவகையான பொருள்கள் பலவகை உலோகங்கள், மரங்கள், தோல், மண் முதலியவற்றால் செய்யப்பட்ட செயற்கை பொருள்களின் பெயர்கள் விவரிக்கப்பட்டுள்ளன. பண்பு பற்றிய பெயர்த்தொகுதி வடிவம், அளவு, நிறம் முதலிய காட்சிப் பொருள் சார்ந்த பண்புபெயர்களும், சுவை, குணம், உணர்வு முதலிய கருத்துப் பொருள் சார்ந்த பண்பு பெயர்களும் இத்தொகுதியில் கூறப்பட்டுள்ளன. சான்றாக, உழுவல் எழுமையும் தொடர்ந்த அன்பு உரைக்கும். இறுமாப்பு ஏக்கழுத்தம் செம்மாப்பு அகமலர்ச்சி நாட்டியம் குறிப்பே என்று சிலவற்றைச் சுட்டலாம். செயல் பற்றிய பெயர்த்தொகுதி செயல் என்றால் வினையைக் குறிக்கும். ஏறத்தாழ 250 வினைகள் இத்தொகுதியில் பேசப்பட்டுள்ளன. செய்தல் என்னும் வினைக்கு, அயர்தல், குயிற்றல், ஆற்றல், இழைத்தல் வனைதல், செய்தல் மாற்ற மாகும். என்ற நூற்பாவில் திவாகரம் விளக்கம் தந்துள்ளது. சில இடங்களின் சொற்களின் பொருள் விளக்கத்திற்கு வேறு நிகண்டுகளில் இடம்பெற்றுள்ள விளக்கத்தோடு ஒப்பிட வேண்டிய தேவை ஏற்படுகிறது. சான்றாக, ஒல்லும் சிரலும் முடிவின் உரைக்கும் என்னும் திவாகர நூற்பாவுக்கு, மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டில் உரிய விளக்கம் தரப்பட்டுள்ளது. கூடியும் கூட்ட மின்மை குலவிய புலவி யென்ப ஊடலே நணுகா ராகி உரைமறுத் திருத்த லாகும் ஆடவர் நீங்க உள்ளே அடைத்துறல் துனியே என்பர். ஊடலைத் தீர்த்தலின் பேர் உணர்த்தலே ஒல்லல் ஆகும். இவ்வாறு நிகண்டுகளை ஒப்பிட்டு ஆராய்ந்து பொருள் கொள்ளும் நிலையில் மேலான விளக்கத்தைப் பெறமுடிகிறது. இங்கு ஒல் என்னும் சொல்லுக்கு உடன்படுதல் என்னும் பொருள் உண்டு என்பதை அறியமுடிகிறது. சேந்தன் திவாகரத்தில் 9500 சொற்கள் இடம்பெற்றுள்ளன. பிங்கலத்தில் 14700 சொற்கள் கூறப்பட்டுள்ளன. நிகண்டுகளில் பொதுவாகப் பெயர்ச்சொற்கள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. ஒரு பொருள் குறித்த பல்பெயர்த்தொகுதிகளையுடைய நிகண்டுகளில், வினைச்சொற்கள் தனி ஒரு தொகுதியில் கூறப்பட்டுள்ளன. ஒரு சொல் பல்பொருள் தொகுதிக்கெனத் தோன்றிய நிகண்டுகளில் பெயர்ச்சொற்களுக்கிடையே வினைச்சொற்களும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியமும் திவாகரமும் தமிழ் இலக்கண மரபில் பழமையான இலக்கணப் பனுவலாகக் கருதப்படுகின்ற தொல்காப்பியத்தின் இடையியல், உரியியல், மரபியல் பகுதிகள் நிகண்டுகளின் தோற்றத்திற்கும் வடிவ அமைப்பிற்கும் அடிப்படையாக அமைந்துள்ள நிலையில் திவாகரத்தில் சில நூற்பாக்கள் தொல்காப்பியத்தை அடியொற்றி, அப்படியே பின்பற்றி எழுந்த நிலையில் சில இடங்களைக் கண்ணுற முடிகிறது. சான்றாக, தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்.உரி.803) கயவே பெருமையு மேன்மையும் காட்டும் (திவா.249) நளியென் கிளவி செறிவும் ஆகும் (தொல்.உரி.806) நளியே பெருமையும் சீதமும் செறிவும் (திவா.255) தாவே வலியும் வருத்தமும் ஆகும் (தொல்.உரி.827) தாவே வலியும் வருத்தமும் ஆகும் (திவா.254) தெவுக் கொளற் பொருட்டே (தொல்.உரி.828) தெவு கொளற் பொருட்டே (திவா.204) பாட்டி என்பது பன்றியும் நாயும் (தொல்.மரபு.1565) பாட்டி யென்ப பன்றியும் நாயும் (திவா.60) மாதர் காதல் (தொல்.உரி.811) மாதர் காதலும் மகளிரும் ஆகும் (திவா.260) புலம்பே தனிமை (தொல்.உரி.814) புலம்பே தனிமையும் நடுக்கமும் புலம்பலும் (திவா.258) எருமையும் மரையும் பெற்றமும் நாகே (தொல்.மரபு.1562) மரையும் பெற்றமும் எருமையும் நாகே (திவா.60) ஆகிய இடங்களை காணும்நிலையில் தொல்காப்பியத்தின் தாக்கம் திவாகரத்தில் முற்றுமுழுதாக அமைந்திருப்பதை அவதானிக்கமுடிகிறது. மேலும் திருக்குறளில் இடம்பெற்றுள்ள சில குறட்பாக்களின் தாக்கத்தைத் திவாகர நிகண்டில் கண்ணுற முடிகிறது. சான்றாக, உடைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (திருக்குறள்) என்ற குறட்பாவின் உள்ளடக்கத்தைத் தழுவிப் பின்வரும் திவாகர நூற்பா இடம்பெற்றுள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. படையும் குடியும் கூழும் அமைச்சும் அரணும் நட்பும் அரசியல் ஆறே (திவாகரம்) இவ்வாறு தமிழ் நிகண்டு மரபில் திவாகரத்தின் வகிபாகம் என்பது பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய நிலையில் காணப்படுகிறது. தொல்காப்பியத்தைப் பின்பற்றி எழுந்ததாகவும் பின்வந்த நிகண்டு நூல்களுக்கு வழிகாட்டியாகவும் அமைந்திருந்த நிலையைக் காணமுடிகிறது. அதிகமான பதிப்புகளைப் பெற்ற நிகண்டு நூலாகத் திவாகரம் திகழ்கிறது. தொல்காப்பியத்தைப் பின்பற்றி நூற்பா யாப்பில் அமைந்துள்ளது. தமிழ் நிகண்டு வரலாற்றில் திவாகர நிகண்டு தனக்கான தனித்த இடத்தினைப் பெற்றுத் திகழ்கிறது. துணைநூற்பட்டியல் 1. திவாகரம் – முதல்தொகுதி, மு.சண்முகம்பிள்ளை, இ.சுந்தரமூர்த்தி ப.ஆர். சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1990. 2. சற்குணம், மா., தமிழ் நிகண்டுகள் ஆய்வு, இளவழகன் பதிப்பகம், சென்னை, 2003. 3. சுந்தர சண்முகனார், தமிழ் அகராதிக்கலை, கழகவெளியீடு, 1971. 4. மாதையன், பெ., சொல்லேர் உழவன், அகராதியியல் கட்டுரைகள், அடையாளம் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2015. 5. ஜெயதேவன், வ., தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 1985

பத்துப்பாட்டில் பண்பாட்டுக் கூறுகள்: உணவுமுறை

பண்பாடு என்பது தொடர்ந்து கற்பது. அதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது. ஒரு தலைமுறையில் கற்றவற்றைப் பின்வரும் தலைமுறையினர் பெற்றுக் கொண்டு அவர்கள்தம் தலைமுறையில் மேலும் புதியனவற்றைக் கற்கின்றனர். இதனால் பண்பாடு தொடர்ச்சியான மாற்றத்திற்கு உட்படுகிறது. சமூக இயல் அறிஞர்களின் கருத்தின்படி, பண்பாடு என்பது, வாழ்க்கை முறை (way of life) என்பதாகும். ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. ஒரு சமுதாயத்தில் வாழுகின்ற பெரும்பான்மை மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் அது வெளிப்படுத்தும். ஒரு சமுதாயத்தில் அமைந்துள்ள கலை, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள், மொழி, இலக்கியம், விழுமியங்கள் (values) முதலியன அந்தச் சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகள் எனப்படும். தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் வெளிப்படுத்தப்படுகின்றது. இத்தொடர்பில், தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும் சமூக பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவப் பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும். தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (Culture dependent) மற்றொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக் கூடியது (Culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவாக்கத்தைத் தரக்கூடிய ‘புறக்கூறுகள்’ பண்பாடு சார்ந்தும், அவற்றின் அகக் கூறுகள் உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும். (பக்தவத்சல பாரதி, மானிடவியல் கோட்பாடுகள், பக்.8,9) என்ற பக்தவத்சல பாரதியின் கருத்தும் இணைத்தெண்ணத்தக்கது. பண்பாடு - விளக்கம் பண்பாடு – பண்படுதல் என்றால் சீர்படுத்தல் அல்லது திருத்தல் எனப் பொருள்படும். நிலத்தைப் பண்படுத்தல் என்றால் நிலத்தைப் பயிர் செய்யத்தக்கவாறு சீர்படுத்தலாம். ஆகவே மனிதர் பண்படுவது பண்பாடு ஆகும். மனிதன் சமுதாயத்தின் ஓர் அங்கம். எனவே, மனிதன் பேசும் மொழி, அணியும் ஆடை, உண்ணும் உணவு, வாழும் முறை, செய்யும் பணி, எண்ணங்கள் ஆகியவை அவன் சார்ந்த சமுதாயத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வாயில்களாகக் கருதப்படுகின்றன. பண்பாட்டு வகைகள் பண்பாட்டைப் பொருள்சார் பண்பாடு, பொருள்சாராப் பண்பாடு என்று இருவகையாகப் பிரிக்கலாம். மக்கள் அவர்களின் தேவைகளுக்குச் செய்து கொள்ளும் அனைத்து வகையான பொருள்களும் பொருள்சார் பண்பாட்டில் அடங்கும். இயந்திரங்கள், கருவிகள், மரச்சாமன்கள், வீட்டுப் பொருள்கள், உடைகள், வேளாண் நிலங்கள் போன்ற எண்ணற்ற பொருள்கள் பொருள்சார் பண்பாட்டைச் சேர்ந்தவை. பொருள்சாராப் பண்பாட்டில் பொருள் வடிவம் பெறாத அனைத்துக் கூறுகளும் இடம்பெறும். எடுத்துக்காட்டாக கருத்துகள், பழக்கவழக்கங்கள், நெறிமுறைகள், அறிதிறன், அழகியல் சிந்தனைகள், இலக்கியங்கள், இசை, நடனம், உணவு உண்ணும் முறை, வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் போன்ற பொருள் வடிவம் பெறாத அனைத்தும் இதில் இடம்பெறும். பண்பாட்டை மூன்று வகையாகச் சமூக இயல் அறிஞர்கள் பிரிப்பார்கள். அவை வருமாறு:  மனிதன் தன் அடிப்படைத் தேவைகளை (Basic needs) நிறைவு செய்யும் முறைகளினால் வெளிப்படும் பண்பாடு  கல்வி, கேள்வி வழியாகப் பேணப்படும் பண்பாடு  குறியீடுகளைப் (Symbols) பயன்படுத்துவதின் வாயிலாக வெளிப்படும் பண்பாடு பத்துப்பாட்டு இலக்கியம் சங்க இலக்கியமான பாட்டும் தொகையும் தமிழர்களின் பழந்தமிழ் இலக்கியம். தமிழ் மொழி செம்மொழி தகுதியைப் பெறுவதற்குக் காரணமானவை. செவ்விலக்கியமாகக் கருதப்படுபவை. பிற்காலக் காப்பிய மரபிற்கு அடிப்படையாக அமைந்தவை. ஆற்றுப்படை நூல்கள், அகநூல்கள், புறநூல்கள் என்ற அடிப்படையில் பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள இலக்கியங்களை முப்பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம்.  திருமுருகாற்றுப்படை  பொருநர் ஆற்றுப்படை  சிறுபாணாற்றுப்படை  பெரும்பாணாற்றுப்படை  குறிஞ்சிப்பாட்டு  முல்லைப்பாட்டு  நெடுநல்வாடை  மதுரைக்காஞ்சி  பட்டினப்பாலை  மலைபடுகடாம் பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள உணவு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது. மனிதன் உயிர்வாழ இன்றியமையாத பொருள் உணவு. பழந்தமிழரின் உணவுமுறையைப் பற்றிப் பத்துப்பாட்டு என்ற தொல்பனுவல் மூலம் ஆராய்ந்து அறிந்துகொள்வதன் மூலம் தமிழர் உணவு பாரம்பரியத்தின் சிறப்புகளையும் தனித்த கூறுகளையும் அறிந்துகொள்ளலாம். சமையல் கலையில் சிறந்து விளங்குபவர்களை நளபாகம், வீமபாகம் ஆகிய சொற்களால் அவர்களை அடையாளப்படுத்துவர். அந்தவகையில், சிறுபாணாற்றுப்படையில் வீமபாகம் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் பழங்காலத் தமிழர்களின் வாழ்வியலில் உணவு முதன்மையாகவும் வளமையானதாகவும் இடம்பெற்றுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. சங்கக் காலச் சமூக அமைப்பு குறிஞ்சி, பாலை முதலிய ஐவகை நிலங்களில் தலைமக்கள், பொதுமக்கள் என்ற இரண்டே பிரிவுகள் இருந்தன. பெரிய நகரங்களில் மட்டும் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் பலவகைத் தொழிலாளர்கள் என்ற பிரிவினர் இருந்தனர். இவை யாவும் தொழில் பற்றியும் நிலம் பற்றியும் பண்பு பற்றியும் உண்டான பிரிவுகளே தவிர, இன்றுள்ளவை போலப் பிறவி பற்றிய சாதி அமைப்புகள் அக்காலச் சமூகத்தில் நிலவவில்லை. நில அடிப்படையிலே மனிதர்களின் பிரிவினையானது காணப்படுகிறது. அந்தப் பின்புலத்திலிருந்து அவர்களின் உணவுமுறையினை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. உணவு உணவெனப் படுவது நிலத்தொடு நீரே என்று புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது. மனிதன் உயிர்வாழ மிகவும் இன்றியமையாதது உணவு. உணவு தேடுதல் மனிதனின் முதல் பணியாக விளங்கியது. உணவைப் பச்சையாகவும், வேகவைத்தும் பதப்படுத்தியும் பயன்படுத்தினர். உணவு பல பொருள்களின் கூட்டுக் கலவையாகும். பண்டைத் தமிழர்கள் சுவைமிக்க உணவுப் பொருள்களைச் சமைத்தனர். நிலத்தின் இயல்பிற்கு ஏற்ப உணவின் தரம் அமைந்திருந்தது. குறிஞ்சி நில மக்கள் மலையும் மலைச் சார்ந்த நிலத்தில் வாழும் இம்மக்களின் அன்றாட உணவுமுறையில் தினை முதலிய மலைத் தானியங்களும் கிழங்கு, பழம், தேன் முதலியனவும் இடம்பெறுகின்றன. கள்ளும் சமைத்துப் பருகுவர். அவர்தம் இல்லத்தில் சமைக்கும் ஒருவகைக் கள்ளிற்குத் தோப்பி என்பது பெயர். (பெரும்பாண்.142) சிறப்பு நாட்களில் நெய் மிக்க உணவு உட்கொள்ளப்பட்டது (குறிஞ்சிப்.304) என்று குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது. பரிசில் பெற்று வந்த கூத்தன் பெறப்போகும் கூத்தனுக்கு ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. வெண்ணெல், செந்நெல், சாமை, கடமான், பன்றி, ஆட்டு மாமிசம், உடுப்புக்கறி ஆகிய உணவுகளின் தன்மையை மலைபடுகடாம் கூறுகின்றது. எயினர்கள் களர்நிலத்தில் வளரும் ஈச்சம்பழம் போன்று மேட்டு நிலத்தில் விளைந்த நெல் சோற்றினை நாய் வேட்டையாடிக் கொணர்ந்த உடும்புக் கறியோடு உண்டதாகப் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. களர்வளர் ஈந்தின் காழ்கண் டன்ன கவல் விளை நெல்லின் செவ்வவிழ் ஞமலி தந்த மனவுச்சூழல் உடும்பின் வறை கால் யாத்தது (பெரும்பாண்.129-132) முல்லை நில மக்கள் காடும் காடு சார்ந்த நிலப்பகுதியில் வாழும் ஆயர்களின் உணவு தினைச்சோறு, வரகுச் சோறு, கூழ், பால், இறைச்சி முதலியன. பாற்கூழே இவர்களின் முக்கிய உணவாக உள்ளது. இவரைக் ‘கூழ்ஆர் இடையன்’ (பெரும்பாண்.175) கூழ்ஆர் கோவலர் என்பர். இவர் தமது உணவுடன் அவரைப் புழுக்கினையும் சேர்த்துக் கொள்வர் எனப் (பெரும்பாண்.193-196) பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. முல்லை நிலச் சீறூர்களில் வாழ்ந்தவர்கள் வரகரிசிச் சோறும் அவரைப் பருப்பும் கலந்து செய்த கும்மாயம் எனப் பெயர் பெற்ற உணவை உண்டனர் எனப் பெரும்பாணாற்றுப்படை 192-195 அடிகள் குறிப்பிடுகின்றன. மருத நில மக்கள் மருத நிலத்தில் வாழும் மக்கள் வயல்களில் விளைந்த நெல், வாளைமீன், நண்டு, அரிசிச்சோறு போன்றவற்றை உணவாகச் சமைத்து உண்டனர். பண்டைத் தமிழர் தாம் வாழ்ந்த நில இயல்பிற்கேற்ப வாழ்வை அமைத்துக் கொண்டனர். மாமிச உணவு தமிழர்தம் வாழ்வில் முக்கிய உணவாகப் பங்கு வகித்துள்ளமை இதனால் புலப்படுகின்றது. உழவர் மகளிர் வரும் விருந்தினரைத் தம் தலைவர் இல்லத்தில் இல்லாத நிலையில் பிள்ளைகளைக் கொண்டு உபசரிக்கச் செய்தனர். உலக்கையால் குற்றி எடுத்த அரிசியில் செய்த வெள்ளிய சோற்றுடன் நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவைக் கறிகளை உண்பிப்பர் எனச் சிறுபாணாற்றுப்படை (183-195) குறிப்பிடுகிறது. மலையில் வாழும் கோழியின் பொரியலுடன் உணவு அளித்தலும் உண்டு எனப் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. அரிசியில் செய்த கள்ளும் அருந்த வழங்குவர் என மலைபடுகடாம் குறிப்பிடுகிறது. முள்ளை நீக்கிச் சமைக்கப்பட்ட முள்ளம்பன்றியின் தசையோடு கலந்த வெண்மையான சோற்றினை உழவர்கள் உண்டனர். இதனை, முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு வண்டு படக் கமழும் (மலைபடு.465-466) என்ற வரிகள் கூறுகின்றன. நெய்தல் நில மக்கள் கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதியில் வாழும் இம்மக்களின் அன்றாட உணவாக அரிசிக்கூழ், மீன்சூட்டுகள் முதலியன விளங்குகின்றன. கூழைப் பரந்த பாத்திரங்களில் விட்டு ஆற்றி உண்பதாகப் பெரும்பாணாற்றுப்படை 275-282 அடிகளும் சிறுபாணாற்றுப்படை 158-159 அடிகளும் எடுத்துரைக்கின்றன. காவிரிப்பூம்பட்டினத்து மீனவர் கடல் இறா, வயல் ஆமை ஆகிய இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர் எனப் பட்டினப்பாலை 63-64 அடிகள் குறிப்பிடுகின்றன. கள்ளுக்கடையில் மீன் இறைச்சியும் விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலை நில மக்கள் குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலை என்னும் படிவம் கொள்ளுமே என்ற பாலை நிலத்திற்கான காட்சியைச் சிலப்பதிகாரம் சுட்டியுள்ளது. சுரமும் சுரம் சார்ந்த நிலப்பகுதியில் வாழும் இம்மக்களின் அன்றாட உணவாக அசைவ உணவு இடம்பெறுகிறது. நாயினால் பிடிக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்ட உடும்பின் தசைக்கறியுடன் உணவு கொள்வதைக் குறித்து பெரும்பாணாற்றுப்படை (130- 133) பேசுகிறது. வாடிய ஊனாகிய உப்புக்கண்டமும் சமைப்பர். இந்த உணவை விருந்தினருக்குத் தேக்கிலையில் வைத்துக் கொடுப்பார்கள் (பெரும்பாண்.89-105) புளியங்கறியிடப்பட்ட சோற்றையும் ஆமாவின் இறைச்சியையும் உண்டனர் எனச் சிறுபாணாற்றுப்படை (175-177) குறிப்பிடுகிறது. மேட்டுநிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிக் சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டார்கள் எனப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. விருந்தோம்பல் உணவுமுறையின் ஒரு பகுதியாகச் சிறக்கும் விருந்தோம்பல் பண்பினைப் பத்துப்பாட்டு அழகாக மொழிகிறது. மகளிர்தம் இல்லத்திற்கு வரும் விருந்தினரைத் தத்தம் பிள்ளைகளைக் கொண்டு முறை சொல்லி அழைக்கச் சொல்லி, அவர்களுக்கு வேண்டுவன நல்கி உபசரித்து அனுப்பினர். இதனை மலைபடுகடாம் பின்வருமாறு எடுத்துரைக்கிறது: அகம்மலி உவகை ஆர்வமொடு அளைக, மகமுறை தடுப்ப, மனைதொறும் பெறுகுவிர் (மலை.184-185) இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் விளக்கமும் இதனை நன்கு புலப்படுத்தும். அப்பகுதி வருமாறு: நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியை உடையராய் விருந்தினரைப் பெற்றேம் என்னும் ஆசையோடே நெஞ்சு கலந்து, தத்தம் பிள்ளைகளைக் கொண்டு முறை சொல்லித் தடுக்கையினாலே மனைகடோறும் பெறுகுவிர். அண்ணன், அம்மான் என்றாற் போல்வன (பத்துப்பாட்டு, நச்சினார்க்கினியர் உரை) மேலும் விருந்தனரை வழியனுப்பும்போது அவர்கள் பின்னால் 7 அடி பின்சென்று வழியனுப்பும் முறை குறித்து (பொருநர்.166) பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது. நன்னன் விருந்தோம்பலில் சிறந்தவன். தன்னை நாடி வந்தோரை முதல்நாள் உபசரித்தது போல எத்தனை நாள் தங்கியிருப்பினும் உபசரிக்கும் தன்மையாளன். கூத்தர் போன்றோருக்கு வெண்ணெல் அரிசியோடு கலந்த மாமிச உணவைக் கொடுத்து உண்ணச் செய்கிறான் என்பதை மலைபடுகடாம், தலைநாள் அன்னபு கலொடு வழிசிறந்து பலநாள் நிற்பினும் பெறுகுவீர் (563-566) எடுத்துரைக்கிறது. இவ்வாறு தமிழர்களின் உணவுமுறையில் பண்பாட்டுக் கூறுகள் வாழ்வோடு இயைந்த நிலையிலே காட்சித்தருகின்றன. அவர்களின் வாழ்வில் உணவிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அதனைப் பகிர்ந்துண்ணும் பண்புநிலை, வருவோர்க்கு இல்லையென்று வழங்கும் மாண்பு போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எனவே பழந்தமிழரின் புறநிலைச் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான, மனித வாழ்விற்கு ஆதாரமான உணவு பழந்தமிழ் இலக்கியமான பத்துப்பாட்டு இடம்பெற்றிருக்கும் கூறுகள் அக்காலச் சமூகத்தோடு ஒன்றிய நிலையில் தொழிற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. துணைநூற்பட்டியல் 1. இராசமாணிக்கனார், மா., பத்துப்பாட்டு ஆராய்ச்சி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1970. 2. தண்டாயுதம், இரா., சங்க இலக்கியம் பத்துப்பாட்டு, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, முதற்பதிப்பு, டிசம்பர், 1978. 3. நச்சினார்க்கினியர், பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், (1961ஆம் ஆண்டு நிழற்படப் பதிப்பு) 1986. 4. பக்தவத்சல பாரதி, மானுடவியல் கோட்பாடுகள், அடையாளம் பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2012. 5. மீனாட்சிசுந்தரனார், தெ.பொ., பத்துப்பாட்டு ஆய்வு புறம், மு.சண்முகம் பிள்ளை பதிப்பாசிரியர், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, 1981.

கிறித்துவர்களின் தமிழ்த்தொண்டு

முன்னுரை ஐரோப்பியர் வருகையால் தமிழகத்தில் கிறித்தவ சமயம் பரவியதோடு தமிழும் புதிய திசையில் பயணம் செய்ய தொடங்கியது. கிறித்தவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம்பெறுவதாகும். தமிழகத்தில் அச்சு இயந்திரம் அறிமுகமானது. செய்யுளின் கடினம் குறைந்து எளிய உரைடை வளர்ந்தது. புத்திலக்கியங்களான சிறுகதை, புதினம், நாடகம் முதலான உரைநடை நூல்கள் தோன்றி தமிழ் மறுமலர்ச்சி அடைந்தது. எழுத்து சீர்த்திருத்தம் ஏற்பட்டது. இத்தகைய பெரும் மாற்றங்கள் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட காரணமானவர்கள் கிறித்தவர்கள். இத்தகைய மாற்றங்களை உருவாக்கிய கிறித்தவர்களின் தமிழ்ப் பணியை, அயல்நாட்டு கிறித்தவர்பணி, தமிழ்நாட்டுக் கிறித்தவர்பணி என இரண்டாகப் பிரிக்கலாம். அயல்நாட்டு கிறித்தவர்களின் தமிழ்த்தொண்டு வீரமாமுனிவர் (1680-1746) இவர் இத்தாலி நாட்டுக் கத்தோலிக்க மதகுரு ஆவார். இவரது இயற்பெயர் கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி. இவர் தமது 30வது வயதில் சமயத் திருப்பணியாற்றத் தமிழகம் வந்தார். சுப்ரதீபக் கவிராயரிடம் 20 ஆண்டுகள் தமிழ் பயின்றார். தமிழோடு தெலுங்கு, வடமொழி ஆகியனவும் கற்றார். தமிழில் சதுரகராதி, தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூல் ஆகியவற்றோடு கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கியங்கள், பரமார்த்த குருகதை என்னும் உரைநடைக் கதைநூல், தேம்பாவணிப் பெருங்காப்பியம் ஆகியன படைத்தும் எழுத்துச் சீர்த்திருத்தம் கண்டும் பெருமைகள் சேர்த்தார். டாக்டர் ஜி.யு.போப் (1820-1907) இவர் இங்கிலாந்து நாட்டவர். தமது 19வது வயதில் தமிழகம் வந்தார். மகாவித்துவான் இராமனுஜ கவிராயரிடம் தமிழை முறையாகப் பயின்றார். முதலில் திருநெல்வேலி சாயர்புரத்திலும், அடுத்துத் தஞ்சையிலும், பின்னர் நீலகிரியிலும் சமயப் பணிபுரிந்தார். திருக்குறள், நாலடியார் போன்றவற்றில் தோய்ந்து மகிழ்ந்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றுள் சில செய்யுள்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 1880இல் இங்கிலாந்து சென்று, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழும் தெலுங்கும் போதிக்கும் ஆசிரியராகப் பணிசெய்தார். திருவாசகத்தில் மனம் தோய்ந்து அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவரால் தமிழ், உலகறியும் பெருமை பெற்றது. டாக்டர் கால்டுவெல் இவர் அயர்லாந்தில் பிறந்து, ஸ்காட்லாந்தில் கல்வி பயின்று, ஆங்கிலக் கிறித்துவ சங்கத்தின் துணையோடு தமது 23வது வயதில் சமயம் பரப்புவதற்காகத் தமிழகம் வந்தார். திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியை இருப்பிடமாகக் கொண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களைக் கிறித்தவராக மாற்றினார். இவர் இலத்தீன், ஹிப்ரூ, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மேலை மொழிகளிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற திராவிட மொழிகளிலும் வடமொழியிலும் அறிவும் புலமையும் பெற்றிருந்தார். இதனால், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian Languages) என்ற ஒப்பற்ற ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டார். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் இராயல் ஆசியக் கழகம் (Royal Asiatic Society) இரண்டும் இவருக்கு இலக்கிய வேந்தர், வேத விற்பன்னர் என்ற பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தன. இவர் எழுதிய திருநெல்வேலி மாவட்ட வரலாறு என்ற நூல் ஓர் அரிய வரலாற்றுக் கருவூலமாகும். இந்தியாவில் 53 ஆண்டுகள் வாழ்ந்த இவர் தமது 77ஆம் வயதில் கொடைக்கானலில் உயிர்துறந்தார். இவரது சமாதி இடையன்குடியில் இவர் எழுப்பிய தேவாலயத்தில் இருக்கிறது. தத்துவ போதகர் (1577-1656) இத்தாலி நாட்டுக்காரரான இவரது இயற்பெயர், இராபர்ட் டி நொபிலி (Robert De Nobili) வடமொழியும், தென்மொழிகளும் கற்றவர். சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி முதலிய நகரங்களில் அவ்வப்போது தங்கி உயர் சாதியினரைக் கிறித்தவர்களாக மதம் மாற்றினார். வீரமாமுனிவருக்கு நூறு ஆண்டுகுள் முன்னர் வாழ்ந்தவர். தமிழில் முதல் உரைநடை நூலை எழுதிய பெருமை இவரையே சாரும். தமிழ் – போர்ச்சுகீசிய அகராதியை உருவாக்கினார். தரங்கம்பாடியில் இவர் பெயரில் ஓர் அச்சகம் இன்றும் உள்ளது. சீகன்பால்கு ஐயர் (1683 - 1719) இவர் ஜெர்மனி நாட்டவர். 1705இல் தமிழகம் வந்தார். தஞ்சாவூருக்கு அடுத்த தரங்கம்பாடியில் எல்லப்பா என்பவரிடம் தமிழ் கற்றார். அங்கேயே சமயப் பணியும் புரிந்தார். தரங்கம்பாடியில் ஓர் அச்சுக் கூடத்தையும், அதற்கு உதவியாகக் காகிதத் தொழிற்சாலை ஒன்றையும் நிறுவினார். முதன் முதலில் தமிழ் நூல்களை அச்சிட்ட பெருமை இவரையே சாரும். எல்லீஸ் (1777 - 1819) இவர் 1810ஆம் ஆண்டு முதல் 1819ஆம் ஆண்டு வரை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரி. 1816ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டிருப்பதை உணர்ந்து தென்னிந்திய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை முதன்முதலில் வெளிப்படுத்தியவர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் திருக்குறளுக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சியின் ஊற்றுக்கண்ணாக எல்லீசு இருந்தார் என்று அயோத்திதாசப் பண்டிதர் குறிப்பிட்டுள்ளார். கமில் சுவலபில், ஆன்டிரநோவ், ரூதின் செம்பியன், டாக்டர் ஆஷர் போன்ற இக்காலத்து வெளிநாட்டுக் கிறித்துவர்களும் தமிழுக்கு அரிய தொண்டினை ஆற்றியுள்ளனர். தமிழகக் கிறித்துவர்களின் தமிழ்த்தொண்டு மேலைநாட்டுக் கிறித்தவர்கள் மட்டுமின்றித் தமிழகத்தில் வாழ்ந்த கிறித்தவர்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர். அவர்களைக் குறித்து இப்பகுதியில் காணலாம். வேதநாயகம் பிள்ளை (1826 - 1889) தமிழகக் கிறித்தவத் தொண்டர்களில் தலையாயவர் இவர். திருச்சிராப்பள்ளி குளத்தூரில் பிறந்தவர். மாயவரத்தில் உரிமையியல் நீதிபதி பதவி வகித்தவர். தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் என்பதை எழுதித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார். இவர் கிறித்தவரேயாயினும் சமரச சன்மார்க்க அன்பர் ஆவார். இவர் எழுதிய சர்வசமய சமரச கீர்த்தனை இதற்குச் சான்று. இவரது நீதிநூல் எளிமையான, இக்கால அறநூலாகும். பெண்ணின் பெருமைகளைக் கூறும் பெண்மதி மாலை எழுதினார். இவர் எழுதிய மற்றொரு புதினம் சுகுண சுந்தரி சரித்திரம் என்பதாகும். எச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை (1827-1900) திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் வைணவ வேளாளர் மரபில் தோன்றி, கிறித்தவராக மாறியவர். இவரைக் கிறித்தவக் கம்பன் என்று அழைப்பார்கள். ஜான்பன்யன் என்பவர் எழுதிய பில்கிரிம்ஸ் பிராக்ரஸ் (Pilgrim’s Progress) என்ற நூலைத் தமிழில் இரட்சண்ய யாத்ரிகம் என்ற காவியமாக எழுதினார். இது 4000 விருத்தப்பாக்களைக் கொண்ட பெருங்காப்பியம் ஆகும். இவரது இன்னொரு நூல் கிறித்தவர்களின் தேவாரம் என்று போற்றப்படும் இரட்சண்ய மனோகரம் என்பதாகும். வேதநாயக சாஸ்திரியார் (1774 - 1864) திருநெல்வேலியில் பிறந்து தஞ்சையில் பணிபுரிந்தவர். இவர் இயற்றிய பெத்லகேம் குறவஞ்சி இயேசு நாதரைக் கதைத் தலைவராகக் கொண்ட நாடகம் ஆகும். இவர் இயற்றிய மற்றொரு நாடகம் சென்னைப் பட்டணப் பிரவேசம் என்பது. கர்த்தர் உலகைப் படைத்த திறம் வியந்து ஞானத்தச்சன் நாடகம் ஒன்றை இயற்றினார். மாலை, உலா, கும்மி முதலிய சிற்றிலக்கிய வகையிலும் இவர் நூல்கள் பல எழுதியுள்ளார். தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர் திருநெல்வேலி சாம்பூர் வடகரை இவரது சொந்த ஊர். தமிழிசைக்கு இவர், ஆற்றிய தொண்டு பெரிது. மேலைநாட்டு இசைக்கும், தமிழிசைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை, வடநாட்டு இசைக்கும், தென்னாட்டு இசைக்கும் உள்ள வேறுபாடு முதலியவற்றைக் கூறியுள்ளார். கருணாமிர்தசாகரம் என்ற பெயரில் இசைப் பேரிலக்கியம் படைத்துள்ளார். எந்த நாட்டவரிடமும் இல்லாத சிறப்பாக 2000 ஆண்டுகட்கு முந்தியது தமிழிசை என்ற உண்மையினை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். முடிவுரை கிறித்துவம் தந்த தமிழ் – இயல், இசை, நாடகம், மொழி, ஒப்பாய்வு, உரைநடை, சிறுகதை, புதினம் எனப் பன்முகங்களை உடையதாகும். இவர்களின் பங்களிப்பைத் தவிரித்துவிட்டு தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய முடியாது.

Wednesday, January 18, 2023

இணையத்தின் விளைவுகள்

இணையம் என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிப்பதாகும். இந்த இணையம் மனிதர்களின் உற்றத் தோழனாக மாறிவிட்டதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இந்நவீன உலகில் பாலமாய் இருப்பது இணையமே ஆகும் என்றால் மிகையாகாது. அந்த இணையத்தின் ஆணிவேராக இயங்கும் பெரும்பாலான அடிப்படைத் தொழில்நுட்பங்களைப் புழங்குவது பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். மின்னஞ்சல் (email), வலைத்தளங்கள் (web pages), வலைப்பூக்கள் (blogs), தேடுபொறிகள் (search engines), வலைக்கூடங்கள் அல்லது சமூக வலைத்தளங்கள் (socical network such as Twitter, Facebook, LinkedIn), வலைத்திரைகள் (video sharing services such as You-Tube), மின்னாட்சி (e-governance), மின்வணிகம் (e-Commerce), வலையூடகங்கள் ( web versions of electronic media), மின் தரவுத்தளங்கள் (online encycopedia such as wikipedia), மின்கலைக்கூடங்கள் (electronic art galleries), இணையக் கல்விக்கூடங்கள் (web based learning, e-learning) என்பவை இவற்றில் அடங்கும். ஆக கல்வி, தொழிற்துறை, விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொருளாதரம், சமூகம் என அனைத்து துறைகளிலும் இந்த இணையத்தின் ‘மாயமும் மகிமையும்’ தேவைப்படுகிறது. இதற்கு முக்கிய சான்று நம் கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்திய pembelajaran maya. தற்போது, இனையத்தின் வழி மாணவர்கள் இல்லத்தில் இருந்தவாறே, பாடத்தை ஒட்டிக் கலந்துரையாடலோ, கருத்துப்பரிமாற்றமோ செய்யலாம். இவ்வாறு கற்க முயலும் மாணவர்கள் கல்வியில் புடமிட்ட வைரமாய் பிரகாசிப்பர் என்பது திண்ணமாகும். இதுமட்டுமின்றி, இணையத்தின் உதவியால் பல மருத்துவ சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. பல நாடுகளில் மருத்துவ வல்லூனர்கள் இந்த முறையை கையாளுகின்றனர். இதற்குச் சான்று அண்மையில் இங்கிலாந்து நாட்டில் இணையத்தின் வழி பிரசவம் நடைப்பெற்றதைக் குறிக்கலாம் மேலும், 'இன்டெர்நெட்' எனப்படும் இணையத்தின் வரவு நம் அன்றாட வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. விரல் நுனியில் தகவல்கள், செய்திகள், புள்ளிவிவரங்கள்; விரல் சொடுக்கும் நேரத்தில் தகவல், செய்திப் பரிமாற்றம், தரவிறக்கம்: பதிவேற்றம்; பூமிக் கோளத்தில் நாடுகளின் எல்லைகள் மறைந்துபோய் 'எல்லையில்லா உலக' உருவாக்கம்; தொலைவு என்பது மறைந்து போய், உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிப்போன அதிசயம்! அதற்கு முக்கியச் சான்று எம்.எச் 17, ஏர் ஆசியா விமானம் கண்டுப்பிடிக்க இந்த இணையத்தின் பயன்பாட்டினை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். தொடர்ந்து, இணையத்தின் ஆதிக்கம் மக்களின் அன்றாட வாழ்விலும் மேலோங்கியே நிற்கின்றது. இன்றைய பரபரப்பான வாழ்வில் மக்கள் நேரத்தை சிக்கனப்படுத்துவதிலும், வேலைகளை எளிமையாக;விரைவாக முடிப்பதிலும் குறியாக இருக்கின்றனர். அந்த வகையில், கட்டணங்களை செலுத்துவது, பொருள்கள் வாங்குவது, வேலைக்கு மனு செய்வது, மற்றவருடன் தொடர்பு கொள்வது என அத்துனை வேலைகளையும் விரல் சொடுகும் நொடியில் முடித்து விடலாம். இந்த நேரத்தில் காலத்தேவனின் தேவை அதிகம் நமக்குத் தேவையில்லையே எனலாம். மேலும், அடையாள அட்டை, கடைப்பிதழ் அட்டை, வங்கி அட்டை என ஒவ்வொரு மனிதனின் முக்கிய பத்திரங்கள் மற்றும் அட்டைகள் செய்ய இணையம் மிக அவசியம். இப்படி பல நன்மைகளை வாரி வழங்கும் பாரி வள்ளரான இணையத்தினால் கெடுதல்களும் விளைகின்றன என்பதை ஒப்புக் கொள்ளதான் வேண்டும். இணையத்தின் மிகப் பெரும் சிக்கலே நம்பகத்தன்மை இன்மதான். சொல்வதைச் சரியாகப் பிழையில்லாமல் சொல்வது மட்டுமல்லாமல் தக்க சான்றுகளையும் காட்ட வேண்டும். இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான செய்திகளை நாம் “கண்னால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற பார்வையில்தான் அணுக வேண்டும். யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதுவதால் உண்மை எது, பொய் எது என்று புரியாமல் தடுமாறுகிறோம். அதனால், பல வகைகளில் தனி மனிதருக்கும் மற்றும் ஒரு நாட்டிற்கும் பிரச்சணைகள் வந்துக் கொண்டிருப்பதை கண்கூடாக காண முடிகிறது. இதற்கு தக்கச்சான்று, வாத்ஸஆப், முகப்புத்தகம் இன்னும் பல. தொடர்ந்து, இணையத்தில் வன்முறை சம்பவங்கள் அளவுக்கு அதிகமாக பெருகெடுத்து வருகின்றன. மின்னியல் திருடர்கள், இணையம் மூலம் வங்கிக் கொள்ளை, நாட்டின் ரகசியங்களத் திருடுதல், இணையம் மூலம் வைரஸ் பரப்புதல் என தீய வழிகளிலும் தன் செல்வாக்கை வளர்த்துள்ளது இணையம். இதற்கு தக்க சான்று, நம் நாட்டின் வலையகம் இணைய hacker முடக்கப்பட்டது. அவையோரே, கத்தியின் கூர்மையை பழம் நறுக்கவும் பயன்படுத்தப்படுகிறது; ஒருவரை காயம் விளைவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆக இது கத்தியின் தவறு இல்லை, அதனைப் பயன்படுத்துவோரின் கையில் உள்ளது. ஆகவே கற்றறிந்த மானிடராகிய நாம் அன்னப் பறவையாய் உருமாறி இணையத்திலிருந்து நல்லதைப் பருகி அல்லதை ஒதுக்கி பயன் அடைவோம்.

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும்

இன்றைய அறிவியல் தகவல் வளர்ச்சி உலகத்தை ஒரு சிற்றூராக மாற்றிவிட்டது. தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் நம்வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தகவல் தொடர்புச் சாதனங்களால் ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூட உடனுக்குடன் மற்றோரிடத்தில் அறிய முடிகிறது. இவற்றில் கணினியின் பங்கு அளப்பரியது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுப்பிடிப்பான கணினி, சில நொடிகளில் மில்லியன் கணக்குகளைச் செய்துகாட்டும். இதை முறையாக இயக்கினால் மனித மூளையைப்போன்று நுண்ணறிவுத் திறனோடு வேலைச்செய்யும். கணினி இன்று எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது. கணினி (computer) என்பது கட்டளைத் தொகுதிகள் (instruction sets) அல்லது நிரல்களின் (programs) மூலம் சில பணிகளை அல்லது கணக்குகளைச் செய்யும் இயந்திரம். முதன்முதலில் 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட முழுமையான எலக்ட்ரானிக் கணினிகளில் பிரம்மாண்டமாக இருந்தன. அவற்றில் பலர் இணைந்து பணிபுரிய வேண்டியிருந்தது. அந்தத் தொடக்க காலத்துக் கணினிகளுடன் ஒப்பிடும்போது இன்றைய கணினிகள் பிரமிப்பூட்டுகின்றன. அவை பழைய கணினிகளை விட பல்லாயிரம் மடங்கு வேகமாக இயங்குவது மட்டுமல்ல, அவற்றை உங்கள் மேஜை மேல், மடி மேல், அல்லது சட்டைப் பைக்குள் கூட வைக்கலாம். பொதுவாக கணினி இயந்திரம் - வன்பொருள் (hardware) மற்றும் மென்பொருள் (software) இடையிலான பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது. வன்பொருள் (hardware) என்பது கணினியில் நீங்கள் பார்க்கவும் தொடவும் முடியும் பாகங்களைக் குறிக்கிறது; இதில் கணினிப் பெட்டியும் அதில் உள்ள அனைத்தும் அடங்கும். வன்பொருட்களில் மிக முக்கியமானது உங்கள் கணினியில் உள்ள மையச் செயலகம் (CPU) அல்லது நுண்செயலி (microprocessor) என்று அழைக்கப்படும் மிகச் சிறிய ஒரு செவ்வக வடிவச் சில்லு(tiny rectangular chip). உங்கள் கணினியின் மூளை (brain) போல - கட்டளைகளைப் புரிந்துகொண்டு கணக்கிடுவது இந்தப் பகுதிதான். கணினி வன்பொருள் சாதனங்கள் கணினி வன்பொருள் சாதனங்கள் எனப்படுவது, உங்கள் திரையகம் (monitor), விசைப்பலகை (keyboard), சுட்டி (mouse), அச்சுப்பொறி (printer), மற்றும் பிற வன்பொருள் (hardware) உபகரணங்கள். இந்த வன்பொருள் சாதனங்கள் ஆனது கணினியில் நிறுவியுள்ள கணினி இயக்கமுறைமையை (computer operating system) தொடர்புக்கொண்டு கட்டளைத் தரவுகளைப் பறிமாறிக்கொள்கின்றன. எனவே இயக்கமுறைமை (operating system) இல்லாமல் வன்பொருள் சாதனங்கள் கணினி அமைப்பில் செயல்படுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகும். கணினி மென்பொருள் கோப்புகள் மென்பொருள் (software) என்பது, வன்பொருளுக்கு (hardware) வேலை கொடுக்கும் கட்டளைகளை (instruction sets ), அல்லது நிரல்களை (programs), குறிக்கிறது. உங்கள் கணினியில் கடிதங்கள் எழுதப் பயன்படுத்தும் சொற்செயலி ( word processing program ) ஒரு வகை மென்பொருள்தான். இயக்க முறைமை (Operating system) என்பது உங்கள் கணினியையும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சாதனங்களையும் நிர்வகிக்கும் மென்பொருள். Windows -உம் Mac OS -உம் பரவலாக அறியப்பட்ட இரண்டு இயக்க முறைமைகள் (operating systems). கணினியின் வரலாறு 1946இல் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC (Electronic Numerical Integrator and Computer) என்ற கணினிதான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி (first general-purpose electronic computer). அது அமெரிக்க ராணுவம் பீரங்கி குண்டுகள் செல்லும் பாதையைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்டது. ENIAC பிரம்மாண்டமான ஒரு கணினி. அதன் எடை 27,000 கிலோகிராமுக்கு (60,000 பவுண்டுகளுக்கு) மேல் இருந்தது; அது ஒரு பெரிய அறையையே நிரப்பக்கூடியதாக இருந்தது. தரவைச் செயலாக்க (To process data), ENIAC சுமார் 18,000 வெற்றிடக் குழாய்களைப் (vacuum tubes) பயன்படுத்தியது. இதில் ஒவ்வொரு குழாயும் ஒரு சிறிய பல்பின் அளவு இருக்கும். அந்தக் குழாய்கள் எளிதில் தீர்ந்துபோனதால் (burned out) தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது. கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் கணக்கிடுவதற்காக முதலில் எளிதான மணிச்சட்டம் உருவாக்கப்பட்டது. கணினி உருவாக இதுவே முதல் படிவமாக அமைந்தது. பாரிசு நகரை சார்ந்த பிளேஸ் பாஸ்கல் என்னும் அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார். கி.பி. 1833 இல் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் கணினியை முதலில் வடிவமைத்தார். ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்லேஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால், முதல் செயல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்பட்டார். மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, ஹார்வார்டு பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் ஹோவார்டு ஜாக்கன் என்பவரை ஐ.பி.எம். பொறியாளர் துணையுடன் எண்ணிலக்கக் கணினியைக் கண்டறித் தூண்டியது. இதற்கு ஹார்வார்டு மார்க்-1 எனப் பெயரிட்டனர். தற்போது அமெரிக்காவும் ஜப்பானும் மீத்திறன் கணினியை உருவாக்கப் போட்டியிடுகின்றன. கணினியின் வகைகள் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகக் கணினியிலும் புதுமையான அமைப்புகள் தோன்றியவண்ணம் உள்ளன. இன்றைய நிலையில், பல்லூடக வசதிகொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி முதலிய கணினிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. கணினியைப் பயன்படுத்துவோரின் தேவை அதிகரிக்க அதிகரிக்க கணினியின் வளர்ச்சியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதனுடன் இணையத்தளமும் இணைக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் பெறமுடிகிறது. இணையம் இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல் என்னும் அமெரிக்கராவர். உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க, இணையம் பயன்படுகின்றது. இலக்கியம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், கணிதம், திரைப்படம் என எண்ணற்ற துறைகள் பற்றி இணையத்தின் வாயிலாகச் செய்திகளை அறிய முடிகிறது. கணினியுடன் இணையத்தள இணைப்பானது படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 1960 ஆம் ஆண்டில், ஒரு கணினியிலிருந்து மற்றொரு கண்னிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர். இது மிகுந்த காலச் செலவை ஏற்படுத்தியது. இதற்காக மாற்றாக, ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க ஈதர்நெட் அட்டை என்னும் சிறுபலகையைப் பொருத்தி பயன்படுத்தினர். இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வட்டாரத்துக்குள் உள்ள கணினிகளை இணைத்தனர். இஃது அகன்ற பரப்பு வலைப்பின்னல் கொண்டது. இந்த வலைப்பின்னல் வழியாக உலகம் முழுவதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது. முழுமையான இணைப்பைப்பெறச் செயற்கைக்கோள்வழி இணைப்பினைப் பயன்படுத்திப் புவியைச் சுற்றி, நாடுகளின்மீது வலம்வரும் விண்வெளிக்கலண்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உலகம் முழுமைக்கான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது. சுவிச்சர்லாந்து நாட்டைச் சார்ந்த பிம்பெர்னர் லீ என்னும் இயற்பியல் வல்லுநர், 1989 ஆம் ஆண்டு இணையதளத்திற்கு உலகளாவிய வலைப்பின்னல் எனப்பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் ஆழைக்கலாம். இவ்வலையமைப்பு, பலசெய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது இணையத்திற்குத் தேவையானவை பேரூர் முதல் சிற்றூர் வரை இணையத்தள வசதிகள் கிடைக்கின்றன. இணையத்தளச் சேவையைப் பயன்படுத்தத் தேவையான பொருள்களாவன. 1. கணினி 2. தொலைபேசி 3. இணையச் சேவை வழங்குநர் 4. மாற்றி (network interface card) 5. தொடர்பு மென்பொருள் இவற்றைக்கொண்டு இணையத் தொடர்பைப் பெறலாம். இணையத்தைப் பயன்படுத்த, இணையச் சேவைக்கு உரியவரிடம் தனிக்கணக்குத் தொடங்குதல் வேண்டும். பின்பு, கணினியை இணையத்தளத் தடத்தில் இணைத்தல் வேண்டும். இணைய இணைப்பு வகைகள் தொலைபேசி வழியாகக் கணினியையும் மாற்றியையும் இணைத்துப் பயன்படுத்தும் முறை, தொலைபேசி இணைப்புச் சேவையாகும். இம்முறையில் விரைவும் வசதியும் குறைவாக இருந்தமையால், புதிய அணுகுமுறை தேவைப்பட்டது. வையக விரிவு வலை செயல்படுவதைக் கொண்டு, இணைய இணைப்பு நான்கு வகையில் கிடைக்கின்றது. உறுப்பினர் எண்ணிலக்க இணைப்பு, கம்பி வடமாற்றி, செயற்கைக்கோள் சேவை, கண்ணறைச் சேவை என்பன ஆகும் கணினிவழிக் கல்வி கணினியைப் பயன்படுத்திக் கற்கும் கல்வியே கணினிவழிக் கல்வி. வீட்டில் இருந்தபடியே தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், பொது அறிவு, நடனம், கைவேலைப்பாடு என எந்த ஒன்றையும் கற்றுக்கொள்ள இயலும். தொலைதூரக் கல்வியை இணையத்தின் உதவியால் கணினிவழியாகப் பலரும் கற்று வருகின்றனர். இணையத்தின் வாயிலாக ஒருவருக்கு ஏற்படும் ஐயங்கள், சிக்கல்கள், தேவைகள், வழிகாட்டுதல்கள் முதலியவற்றுக்கான தீர்வுகளைப் பெறவியலும். தீர்வுகளைப்பெற மின்னஞ்சல் முகவரி உதவுகிறது. வீட்டிலிருந்தபடியே நேருக்குநேர் தொடர்புகொண்டு கற்கும் வாய்ப்பும் இன்று கிடைக்கின்றது. கணினிவழியாக மொழிக்கல்வியும் பெறவியலும். மொழியின் அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் எனத் தொடங்கி உயர்நிலைத் திறன்களான கதை, கட்டுரை, செய்யுள், பாடல், கடிதம். சுருக்கி வரைதல், விரித்தெழுதுதல், குறிப்பெடுத்தல், அகராதி தேடல் என அனைத்தையும் இணையம் வாயிலாகக் கறக இயலும். உலகெங்கும் வாழும் தமிழர்க்கும் தமிழறய விழைவோர்க்கும் இவ்வாய்ப்பினைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. தமிழ் என்னும் இணையத்தளம் தமிழ் எழுத்துகளை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தருகிறது கணினியின் பயன்கள் கணினி, நம் அன்றாட வாழ்வில் பயன்படும் இன்றியமையாத கருவியாகிவிட்டது. வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, கல்வி, மருத்துவம், விண்வெளி, பாதுகாப்பு முதலிய பல்துறைகளில் பயன்பட்டு வருகிறது. சொல் விளையாட்டு, பொறியியல் வரைபடம் வரைதல், பொழுதுபோக்கு விளையாட்டுகள், கணிதத் தேற்றங்களின் தீர்வுகள் போன்ற அரிய பணிகளையும் கணினி எளிமையாகச் செய்கிறது. பேருந்து நிலையங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், உணவகங்கள் என எவ்விடத்தும் கணினியின் ஆட்சியே நிலவுகிறது. அது வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தி, மக்களின் வாழ்க்கைத்தரம் உயரத் துணை செய்கிறது. உள்ளங்கையில் உலகம். தொலைத்தொடர்புத் துறையில் ஈராயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை விடக் கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பல நூறு மடங்காகும். இன்று ஒருவரை நேரடியாகப் பார்க்காமலே மின்னனுத்தகவல் வாயிலாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. வீட்டிலிருந்தபடியே உலகத்தைப் பார்க்க, பழக, மகிழ வாய்ப்பைப் பெறவும் இணையம் உதவுகிறது. கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்லவேண்டும். எனினும் கணினி வல்லுநர் பில்கேட்ஸின் கூற்று, இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது. கணினியின் பயன்பாடுமிக்குள்ள இந்தக் காலத்தில், தொழில்நுட்ப உத்திகள் அனைத்தையும் பயன்படுத்திக் கணினிவழியாகத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் பெறமுடிகிறது. இந்நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான கணினி, அறிவை விரிவு செய்வதற்கும் உலகத் தொடர்பிற்கும் சிறந்த வாயிலாகத் திகழ்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் புதுமைகளான கணினியும் இணையத்தளமும் தொலைத்தொடர்புக் கருவிகளும் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொண்டு வந்துள்ளன.

இணையத்தில் தமிழ் - வலைப்பூ

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையில் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழி இணையத்திலும் தனது ஆட்சியைச் செலுத்தி வருகிறது. கணினியில் பயன்படும் மொழிகளில் ஆங்கிலத்திற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் உள்ளது. கணினியில் இணையம் என்ற அமைப்பு உலகத்தைக் கைக்குள் கொண்டு வரும் மாயவித்தையைச் செய்து வருகிறது. இன்று இணையம் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு இணையத்தின் பயன்பாடு மக்களிடையே கணக்கிட முடியாத நிலையில் காணப்படுகிறது. கணினியின் வரமாக இணையம் திகழ்கிறது. இணையத்தின் மூலமாகப் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அனைத்து விதமான தகவல்களையும் தரவுகளையும் ஒரு நொடிக்குள் நம் கைக்குள் கொண்டு வந்து சேர்ப்பதில் இணையம் பெரும்பங்கு ஆற்றிவருகிறது. இன்று நிறுவனங்கள் இணையத்தினை 2G, 3G, 4G என்ற தலைமுறைகளைப் பயன்படுத்தி அதிவேகமான இணையப் பயன்பாட்டினை மக்களுக்கு வழங்குவதில் முனைப்புடன் செயல்படுகிறது. கணினித் தமிழ் வளர்ச்சி பெற்ற இன்றைய காலகட்டங்களில் அதில் குறிப்பாக இணையத்தில் தமிழ் தட்டச்சு உருவாக்கப்பட்டதன் பயனாக இணையத்தில் தமிழ் எங்கும் உலவி வரக் காண்கிறோம். கணினித் தமிழ் தமிழ் மொழியைக் கணினியில் செயல்படுத்திக் காட்டிட பல்வேறு மென்பொருட்கள் இன்று உருவாக்கப்பட்டுள்ளன. அதன்பயனாக ஆங்கில விசைப்பலகையைக் கொண்டு தமிழ் தட்டச்சு செய்யவும் அல்லது கூகுள் விசைப்பலகை மூலம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதனைத் தமிழில் எழுத்துப் பெயர்ப்பு செய்வதும் எனப் பல்வேறு முறைகள் பின்பற்றுவதன் வாயிலாகத் தமிழ் எழுத்துருக்கள் கணினி பயன்பாட்டில் எளிதாக இடம்பெற்றுள்ளன. வலைப்பூ web blog என்பதன் சுருக்கமே Blog ஆகும். தமிழில் வலைப்பூ, வலைப்பதிவு என்று அழைக்கப்படும். ப்ளாக் என்பது ஒருவகையான இணையத்தளம் அல்லது இணையத்தளத்தில் ஒரு பகுதியாகும். செய்திகளைப் பகிரும் முறையில் இவை இரண்டும் வேறுபடுகின்றன. இணையத்தளங்களில் செய்திகள் எப்பொழுதாவது தான் புதுப்பிக்கப்படும். ஆனால் வலைப்பூவில் (blog) செய்திகள் அடிக்கடி புதுப்பிக்கப்படும். வலைப்பூவின் சிறப்பம்சங்களில் ஒன்று வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடும் வசதி உள்ளது. இணையத்தளங்களில் அந்த வசதி இல்லை. நம் கருத்துக்களைச் சொல்ல வேண்டுமானால் மின்னஞ்சல், தொலைபேசி ஆகியவற்றைத் தான் பயன்படுத்த வேண்டும். இணையத்தளம் தொடங்குவதற்கு PHP, MYSQL, Python போன்ற கணினி மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் வலைப்பூ தொடங்குவதற்குக் கணினி அடிப்படைகள் தெரிந்திருந்தாலே போதுமானது. வலைப்பூக்கள் ஏன் தொடங்க வேண்டும் என்ற கேள்விக்கு நம்மிடம் விடையில்லை. எதற்காக வேண்டுமானாலும் வலைப்பூவைத் தொடங்கலாம். உங்கள் கருத்துக்களையோ, அனுபவங்களையோ, உங்களுக்கு தெரிந்த ஒன்றைப் பற்றியோ, நீங்கள் ரசித்தவைகளைப் பற்றியோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதாக வலைப்பூவைத் தொடங்கலாம். இணையத்தின் மூலம் பணம் சம்பாதிக்கவும் சிலர் வலைப்பூவைத் தொடங்குவர். இலவசமாக வலைப்பூவைத் தொடங்குவதற்குப் பல இணையத்தளங்கள் உள்ளன. ப்ளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் ஆகிய இரண்டும் அவற்றில் முக்கியமாக விளங்குகின்றன. ப்ளாக்கர் (Blogger) தளம் கூகிள் நிறுவனத்தின் தளமாகும். உங்களுக்கு ஜிமெயில், யூட்யூப் போன்ற கூகிள் கணக்கு இருந்தால் அதன் மூலம் ப்ளாக்கர் தளத்தை உருவாக்கிப் பயன்படுத்த முடியும். அல்லது புதிதாக கூகிள் கணக்கைத் தொடங்கியும் பயன்படுத்தலாம். நீங்கள் தொடங்கும் வலைப்பூ முகவரியில் நீங்கள் கொடுத்த பெயருடன் .blogspot என்று சேர்ந்து வரும். இதற்கு Subdomain என்று பெயர். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் பெயரைக் கொடுத்திருந்தால் உங்கள் முகவரி பெயரோடு blogspot.com என்று வரும். என்னுடைய வலைப்பூவின் பெயர் ilanangaiwritings.blogspot.com இந்த வலைப்பூவினைத் தொடங்கிய பிறகு என்னுடைய கட்டுரைகளை இதில் தொடர்ந்து எழுதி வருகிறேன். கட்டுரைகள் நூலாக்கம் பெறுவது மட்டுமின்றி இதுபோன்ற கணினியில் உள்ளீடு செய்வதன் மூலம் நம்முடைய படைப்புகள் தொடர்ந்து வெளிவருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் இதுபோன்ற ஊடகங்களில் எழுதி வருவதில் ஆய்வாளர்கள் முனைப்புக் காட்ட வேண்டும். ஒரு வலைப்பூ தளத்தை உருவாக்கிக் கொண்டதன் பயனாக அந்தத் தளத்திலிருந்தே பல வலைப்பூ கணக்குகளை உருவாக்கிக் கொள்ள முடியும். இன்று என்னுடைய வலைப்பூ தளத்தைப் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூக்களை இயக்கி வருகிறேன். வலைப்பூ தொடங்க எந்தப் பணமும் செலுத்த வேண்டியதில்லை. இணையத்தளம் போன்று இயங்கக் கூடியது. ஆனால் எந்த விதமான கட்டணமும் இதற்கு தேவையில்லை. வலைப்பூ தொடங்குவதன் மூலம் படைப்பாளர்கள், ஆய்வாளர்கள் பலர் நன்மையை அடைய வாய்ப்புண்டு. அதில் நாம் எழுதுவது, உள்ளீடு செய்வது என்று அனைத்தும் மிகச் சுலபமாக அமைந்துள்ளது. வலைப்பூவினை இயக்குவது அதிலுள்ள அமைப்புகளை மாற்றி அழகான பின்னணியில் நமது வலைப்பூ தளத்தினை உருவாக்கிக் கொள்வது என அனைத்தையும் எளிதில் அறிந்துகொண்டு செயல்படுத்த முடியும். இவ்வாறு வலைப்பூ என்ற அமைப்பின் மூலம் தமிழ் மொழியின் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட பலர் இன்று இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். வலைப்பூ என்பது இணையத்தில் நமக்கான இடம் என்று அனைவரும் அதில் தொடர்ந்து தங்களுடைய ஆய்வுகளை, படைப்புகளை எழுதி வரவேண்டும். வருங்காலச் சமூகம் கணினி மையமாகக்கப்பட்டது. அதற்கான தேடுதல் என்பது இணையத்தளத்திலே அமைந்துள்ளது. எனவே தமிழ் மொழியில் உள்ள செய்திகளை இணையத்தில் ஏற்றுவது என்பது நம் அனைவரின் கடமை எனக் கருத வேண்டும். கணினித் தமிழ் உருப்பெற அதுவே வழிவகையாகும்.

UGC NET Tamil TNPSC Tamil

அணியிலக்கணத்தில் யாப்பிலக்கணத்தின் செல்வாக்கு

தமிழ் இலக்கண மரபானது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றிலக்கண மரபிலிருந்த எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கண மரபாக வளர்ச்சி...